தென்னிந்திய மேடைகளில் சிங்கப்பூர் கலைஞர்களின் இசை முழக்கம்

2 mins read
f7da8c44-0c09-4356-ba25-9d59511796f4
-

மாதங்கி இளங்­கோ­வன்

'வேணு கான லஹரி' என்­னும் பாஸ்­கர் கலைக் கழ­கத்­தைச் சேர்ந்த புல்­லாங்­கு­ழல் இசைக்­குழு இம்­மா­தம் தென்­னிந்­தி­யா­வின் வெவ்­வேறு பகு­தி­களில் பல படைப்­பு­களை மேடை­யேற்றி கைதட்­டல்­க­ளைப் பெற்­றுள்­ளது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த முதல் கர்­நா­டக இசைக் குழு­வாக அவர்­கள் சென்னை மார்­கழி இசை விழா­வில் பங்­கெ­டுத்­த­னர். தேசிய கலை­கள் மன்­றம், பாஸ்­கர் கலைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வு­டன் இப்­ப­ய­ணம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அவர்­க­ளது பய­ணம் இம்­மா­தம் 14ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி­யன்று முடி­வ­டைந்­தது. தங்­கள் பய­ணத்­தின்­போது சென்­னை­யில் மட்­டு­மல்­லா­மல், கோயம்­புத்­தூர், திருச்­சூர், குரு­வா­யூர் என பற்­பல இடங்­களில் குழு­வி­னர் இசை நிகழ்ச்­சி­க­ளைப் படைத்­த­னர்.

இப்­ப­ய­ணத்­துக்­காக பிர­பல உள்­ளூர் புல்­லாங்­கு­ழல் கலை­ஞ­ரான கான­வி­னோ­தன் ரத்­னம் மொத்­தம் 10 புல்­லாங்­கு­ழல் கலை­ஞர்­க­ளுக்கு ஏறத்­தாழ மூன்று மாதங்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளித்து, சில சவா­லான பாடல்­க­ளை­யும் அவர்­க­ளுக்­குக் கற்­பித்­தார். தேசிய கலை­கள் மன்­றத்­தின் இளம் கலை­ஞர் விருது, உலக அமைதி, நல்­லி­ணக்க அமைப்­பின் வாழ்­நாள் சாதனை விருது, மனி­த­நேய பதக்­கம் ஆகி­யவை அவர் வென்ற விரு­து­களில் சில.

மேடை­யே­றிய கலை­ஞர்­க­ளுள் சிலர் தங்­கள் புல்­லாங்­கு­ழல் அரங்­கேற்­றத்தை நடத்தி முடித்­துள்­ள­னர், சிலரோ தொடர்ந்து ஆர்­வத்­து­டன் கற்­றுக்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இசை மீது தீரா மோகம் கொண்ட இவர்­க­ளுக்கு, இந்­தி­யா­வில் தங்­கள் இசை­யார்­வத்தை வெளிக்­காட்­டும் நல்­வாய்ப்பை இந்­தி­யப் பய­ணம் தந்­த­தாக எண்­ணு­கின்­ற­னர்.

கடந்த 17 ஆண்­டு­க­ளாக புல்­லாங்­கு­ழல் வாசிக்க கற்­று­வ­ரும் திவ்­ய­ஸ்ரீ, 23, " ஒவ்­வோர் ஆண்­டும் நாங்­கள் நவ­ராத்­திரி விழா­வின்­போது ஆல­யங்­களில் புல்­லாங்­கு­ழல் வாசிப்­போம். இம்­முறை இந்­தி­யா­வில் என் நண்­பர்­க­ளோடு சேர்ந்து ஆன்­மி­கம் நிறைந்த பய­ணத்­தில் புல்­லாங்­கு­ழலை வாசித்­தது எனக்கு மன­நி­றை­வைத் தந்தது," என்­றார் திவ்யா, 2019ஆம் ஆண்­டி­லும் இந்­தி­யா­வில் இசை நிகழ்ச்­சியைப்­ படைத்­துள்­ளார்.

அதே­போல, ஏழாண்­டு­க­ளாக புல்­லாங்­கு­ழல் வாசித்து வரும் மனோஷ் விஜய், 31, "இது­போன்ற பெரும் மேடை­களில் இசை படைக்­கும்­போது எனக்கு பய­மி­ருந்­தா­லும், பார்­வை­யா­ளர்­க­ளின் ஊக்­கத்­தால் தன்­னம்­பிக்­கை­யு­டன் மேடை­யேற முடிந்­தது," என்­றார்.

"ஓரி­டத்­தி­லி­ருந்து வேறி­டத்­துக்­குப் பல­ மணி நே­ரம் பய­ணம் செய்­து­விட்டு மேடை­யேறி வாசிப்­பது சற்று சவா­லா­கத்­தான் இருந்­தது. இருந்­தா­லும் எங்­கள் குழு­வி­ன­ரின் உற்­சா­க­மும் குழு உணர்­வும் சிறப்­பான இசைப் படைப்பை சாத்­தி­ய­மாக்­கி­யது," என்­றார்.

உள்­ளூர் பர­த­நாட்­டி­யக் கலை­ஞர் சிவா­ஷினி குமா­ரின் நளின நட­ன­மும் அக்­கு­ழு­வின் இசைப் படைப்­பு­க­ளுக்கு அழகு சேர்த்­தது.

தாம் முன்பே கற்­றுக்­கொண்ட நட­னங்­களை மீண்­டும் இந்­தி­யா­வில் படைத்­தார் சிவா­ஷினி. தனி நட­னங்­களை இம்­மே­டை­களில் படைத்­தது அவ­ருக்கு முதல் அனு­ப­வ­மாக அமைந்­தது.

புல்­லாங்­கு­ழல் இசைக்­கு­ழுவை பாஸ்­கர் கலைக் கழ­கத்­தில் அமைக்க வேண்­டும் என்­பது அதன் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரான மறைந்த திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் நீண்ட நாள் ஆசை­யாக இருந்­தது. அவ­ரது கனவு இவ்­வாண்டு ஜூலை மாதத்­தில் 'வேணு கான லஹரி' என்ற பெய­ரில் உயிர்­பெற்­றது.