ரச்சனா வேலாயுதம்
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரின் கல்வித் துறையில் பணியாற்றிவரும் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணனுக்கு இம்மாதம் 26ஆம் தேதி நடந்த பாரதியார் விழாவில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ் மொழிக்காகவும் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும் சேவை ஆற்றியவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருதை இலக்கியம் மீது அதிக நாட்டம் உள்ள இவர் பெற்றுக்கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்
கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் செல்லக்கிருஷ்ணன், தமிழ் முரசு, தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து வழங்கும் 'நல்லாசிரியர் விருது' உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
புதிய பாணியில், காலத்திற்கு ஏற்ப தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் மும்முரமாகச் செயல்படும் இவர் இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழா, இந்த ஆண்டு ஸூம் மெய்நிகர் தளம் வழி நடைபெற்றது. 'பாரதியாரை மக்கள் முழுமையாக புரிந்திருக்கிறார்களா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடந்தது.
ஏறத்தாழ 70 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் நேரலை யூடியூப் வாயிலாக ஒளி
பரப்பப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பல தமிழ் பேச்சாளர் மன்றங்களிலிருந்து பேச்சாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திரு சுகி
சிவம் தலைமையில் இந்தப் பட்டிமன்றம் நடந்தது.
"பாரதியாரின் சிறப்புகளையும் தாக்கத்தையும் இந்தப் பட்டிமன்றம் சிறப்பாக வெளிப்படுத்தியது.
பேச்சாளர்களுக்கு இந்தப் போட்டி ஒரு நல்ல தளமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்," என்று கழகத்தின் தலைவர் மு. ஹரி
கிருஷ்ணன் கூறினார்.
'நாம் பாரதியாரைப் புரிந்து வைத்துள்ளோம்' என்று ஹேமா சுவாமிநாதன், கேத்திரபாலன் மூக்காண்டி, சிலம்பரசன் பருசப்புலி ஆகியோர் ஒட்டிப் பேசினர்.
சிறு குழந்தைக்குப் புரியும் வகையில், சொல்ல வருவதை எளிதான தமிழில் பாரதி கூறியுள்ளார். மறைந்து நூறு ஆண்டுகளாகியும் பாரதியாரை இந்த உலகம் கொண்டாடுகிறது என்பதில் தமிழர்
களுக்குப் பெருமை என்று மூவர் வாதிட்டனர்.
'பாரதியாரை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை' என்று எதிர்த்தரப்பைச் சேர்ந்த பாரதி
செல்வன், உமா சங்கர், அனுராதா வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கூறினர்.
உயிரோடு இருக்கும்போது
பாரதியைப் போற்றாத நிலையில் அவரை ஒதுக்கி வைத்தது சமுதாயம். இறந்த பிறகு, போற்றுவதில் என்ன பயன் என்று வினவினர்.
இப்போது திரைப்பட நடிகர்
களைப் போற்றும் விதத்தில் அப்போது பாரதியாரைப் போற்றியிருந்தால் அவரின் சொல் உலகளவில் முன்கூட்டியே பரவியிருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
யார் சொல்லுக்கும் அடிபணியாத பாரதியாரை எக்காலத்திலும் புரிந்துகொள்ள முடியாது என்ற தீர்ப்பை பட்டிமன்ற நடுவர் திரு சுகிசிவம் வழங்கினார்.
எனினும், நாம் பாரதியாரைப் புரிந்துக்கொண்டோம் என்ற அணி பேச்சளவில் வெற்றி பெற்றது என்றும் அறிவித்தார்.

