மாதங்கி இளங்கோவன்
உள்ளூர்க் கவிதைகளை ஆராய வாய்ப்பளிக்கும் 'கவிதைத் துளிகள்' எனும் போட்டிக்கு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டியின் வாயிலாக கவிதைகளைப் பற்றி மக்கள் தங்கள் சிந்தனைகளை விளக்குவதற்கு எட்டு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
ந.பழநிவேலு, மா.இளங்கண்ணன், சிங்கை முகிலன், பாத்தூறல் முத்துமாணிக்கம், க.து.மு.இக்பால், மு.தங்கராசன், ஜே.எம்.சாலி, பி.கிருஷ்ணன் ஆகியோர் அந்த எட்டு உள்ளூர் எழுத்தாளர்களாவர்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், அந்த எட்டுப் பேரின் படைப்புகளில் இருந்து தங்களுக்குப் பிடித்தமான கவிதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது அவர்களது உள்ளங்களை ஏன் கவர்ந்துள்ளது என்பதற்கான காரணங்களை விவரிக்க வேண்டும்.
அத்துடன், தாங்கள் தேர்ந்தெடுத்த கவிதை தங்களது வாழ்க்கைக்கு எவ்விதத்தில் பொருந்து கின்றது என்பதையும் அவர்கள் விளக்கிக் கூறவேண்டும்.
போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துகளை கோவையாகக் கூறி, அதனை ஓர் ஒளிக்காட்சி வடிவில் தயார்செய்ய வேண்டியதுதான் போட்டியின் ஆக சுவாரசியமான அங்கமாக விளங்குகின்றது.
அந்த ஒளிக்காட்சி இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், ஒளிக்காட்சி படைப்பு போட்டியாளர்களின் சுயபடைப்பாக அமைய வேண்டும். போட்டியாளர்களின் படைப்பு பாணி தெளிவாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
போட்டியாளர்கள் அனுப்பும் ஒளிக்காட்சிகள் புத்தாக்கச் சிந்தனையை பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் காத்திருக்கிறார்கள்.
இப்போட்டியில் பங்கெடுக்க விரும்புவோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒளிக்காட்சிகளை https://go.gov.sg/tllpcpoem23 என்னும் இணையப்பக்கத்தில் போட்டியாளர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
இம்மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமைக்குள் போட்டியாளர்கள் தங்களது ஒளிக்காட்சிகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல் விவரங்களுக்கு @tllpc எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தை நாடலாம்.
போட்டியில் சிறந்த பத்து ஒளிக்காட்சிப் படைப்புகள் தேர்வுசெய்யப்பட்டு, வெற்றியாளர்களுக்கு $30 மதிப்பிலான என்டியுசி பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்படும்.

