கெரோசல் தளத்தில் மோசடிகள் டிசம்பரில் பெரிதும் அதிகரிப்பு
சிங்கப்பூரில் டிசம்பர் மாதத்தில் கெரோசல் இணையத் தளத்தில் போலியான கொள்முதல்காரர்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் S$830,000 தொகை பறிபோய்விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கெரோசல் தளத்தில் கொள்முதல்காரர்கள் போல் நடிக்கும் மோசடிக்காரர்கள், தங்கள் வலையில் சிக்கும் அப்பாவிகள் விற்பதாக விளம்பரப்படுத்தி உள்ள பொருள்களை வாங்கிக்கொள்ள முன்வருவார்கள். பிறகு வங்கி விவரங்களைக் கேட்பார்கள்.
இதற்காக மோசடிக்காரர்கள் போலியான இணையத்தள முகவரிகளைப் பயன்படுத்துவார்கள். கெரோசல் தளத்தில் டிசம்பரில் மட்டும் போலியான இணையத்தள மோசடிகள் பெரிதும் அதிகரித்துவிட்டன. குறைந்தது 877 பேர் S$830,000 தொகையை இழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
ஜனவரி முதல் நவம்பர் வரை இத்தகைய மோசடிகளில் குறைந்தபட்சம் 975 பேர் சிக்கி S$836,000 தொகையை இழந்துவிட்டனர். எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளும்படி கெரோசல் தள பயனீட்டாளர்களுக்கு காவல்துறை ஆலோசனை கூறி உள்ளது.
லஞ்சம்: முன்னாள் ஊழியருக்கு 20 மாதச் சிறைத்தண்டனை
'சுர்பனா சைட் சூப்பர் வைசர்ஸ்' என்ற ஊழியர் சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், செங்காங்கில் 2017ல் தொடங்கப்பட்ட ரிவர்வேல் ஷோர்ஸ் என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிடிஓ கட்டுமான இடம் ஒன்றில் நடக்கும் வேலைகளை மதிப்பிடும் பொறுப்பில் இருந்தார்.
சியோவ் கூன் தொங், 60, (படம்) என்ற அந்த ஊழியர் 30 மாதங்களுக்கும் மேலாக ஏழு துணை ஒப்பந்தக் காரர்களிடம் இருந்து $50,500 லஞ்சம் வாங்கினார்.
வேலை இடத்தில் அந்த ஒப்பந்தக்காரர்களின் வேலைகள் நடந்தபோது அவர்களுக்குப் பாதகமாக நடந்து கொள்ளாமல் இருக்கக் கைமாறாக பணத்தை அவர் பெற்றுக்கொண்டார். நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட சியோவுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது அதேபோன்ற இதர ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ரெட்ஹில் குளோஸ் வீட்டில் தீ மூண்டு இருவர் பாதிப்பு
ரெட்ஹில் குளோசில் உள்ள புளோக் 89ன் 11வது மாடி வீடு ஒன்றில் புதன்கிழமை இரவில் தீ மூண்டதை அடுத்து இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 30 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதுபற்றி தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, வீட்டின் வரவேற்பு அறையின் ஒரு மூலையில் இருந்த பொருள்கள் தீப்பிடித்துக்கொண்டதால் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தது.
அணையாத சிகரெட், மெழுகுவர்த்தி போன்ற பொருள்களை வீட்டில் அங்கும் இங்கும் போட்டு அலட்சியமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று இந்தப் படை மக்களுக்கு ஆலோசனை கூறியது.

