ஏட்டுக்கல்வித் தகுதியை மட்டும் பாராமல் ஆற்றலையும் தகுதியையும் அங்கீகரித்து அவற்றுக்கு வெகுமதி அளிக்க சிங்கப்பூர் உறுதிபூண்டிருக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
திருவாட்டி ஹலிமா ஃபேஸ்புக்கில் தமது ஆண்டிறுதிச் செய்தியை வெளியிட்டார்.
"பொருளியலுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய அதிக தேர்ச்சியுள்ள வேலைகளுக்கு இன்னமும் உரிய மதிப்பை நாம் அளிக்கவில்லை. அத்தகைய வேலைகளுக்குப் பட்டப் படிப்பு தேவை என்ற அவசியமும் இல்லை. இந்த மனப்போக்கு மாற வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
"ஊழியர்களைச் சேர்க்கும் தங்களுடைய நடைமுறைகளை மாற்ற மேலும் முதலாளிகள் பலவற்றையும் செய்ய முடியும்.
"பட்டப்படிப்பு இல்லாத ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த பயிற்சியை அளித்து வாழ்க்கைத்தொழில் முன்னேற்ற வழிகளை அமைத்துத் தர முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
"உலகின் பல பகுதிகளிலும் சமூகங்கள் பிளவுபட்டு உள்ளன. சிலவற்றில் வன்செயல்கள்கூட அங்கேறுகின்றன.
"இருந்தாலும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து புத்தாண்டிலும் ஐக்கியமாக இருந்து வருவார்கள்," என்று அவர் பெரிதும் நம்பிக்கை தெரிவித்தார்.
"நம்முடைய பன்மயத்தைக் காக்க நாம் அரும்பாடுபட்டு இருக்கிறோம். ஒருவர் மற்றொருவரை புரிந்துகொண்டு மரியாதை அளித்து அதன்மூலம் பிணைப்புமிக்க சமூகமாக நாம் திகழ்ந்து வருகிறோம்.
"நம்மை பிளவுபடுத்தக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தாமல் நம்மை ஐக்கியப்படுத்தக்கூடிய அம்சங்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவோம்," என்று அதிபர் குறிப்பிட்டார்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோர், உடற்குறையாளர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி சிங்கப்பூரர்களை அதிபர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
பெரும் பொறுப்பை மவுனமாக நிறைவேற்றக்கூடிய பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு மேலும் பலவற்றை நாம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டை நினைவுகூர்ந்த அதிபர், அதிகரிக்கும் பணவீக்கம், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு, கொவிட்-19 தொற்றின் நடப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் வெற்றிகரமான முறையில் தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்றியதால் அது தன் எல்லைகளைத் திறக்க முடிந்தது. கட்டுப்பாடுகளை அகற்ற முடிந்தது.
"இதனால் பொருளியலுக்கு ஊக்கம் கிடைத்தது. நம் பொருளியல் இந்த ஆண்டில் 3.5% வளர்ச்சி காணும். இதற்கு அதுவே காரணம்," என்றார் அவர்.
இருந்தாலும் இதே வளர்ச்சி அடுத்த ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்க இயலாது என்று கூறிய அதிபர், சிங்கப்பூர் பொருளியல் 2023ல் 2.5% வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
ஊழியர் சந்தை வலுவாக இருக்கிறது என்றாலும்கூட பணவீக்கமும் நிச்சயமில்லாத உலக நிலவரமும் சிங்கப்பூரர்களிடையே கொஞ்சம் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவுவதற்காக சென்ற ஜூனில் அரசாங்கம் $1.5 பில்லியன் ஆதரவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதைச் சுட்டினார்.
இந்த ஆண்டின் அதிபர் சவால் நிதித் திட்டம் குறைந்த வருமான குடும்பங்களில்தான் ஒருமித்த கவனம் செலுத்தி வந்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19ஐ பொறுத்தவரை சிங்கப்பூரர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்று கூறிய அவர், புத்தாண்டு எல்லாருக்கும் உடல்நலத்தோடும் அமைதியோடும் மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

