சீனாவில் இருந்து வரும் பயணிகளால் சிங்கப்பூருக்கு கொவிட்-19 மிரட்டல் அவ்வளவாக இராது.
சிங்கப்பூரின் தடுப்பூசி சாதனையும் மக்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக மீள்திறனுடன் திகழ்வதும் காரணம்.
சீனாவில் இருந்து கணிசமான அளவுக்குச் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தால், இலேசான அளவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேண்டுமானால் கொஞ்சம் கூடலாம்.
ஆனால், பெரிய அளவில் மிரட்டல் இருக்காது என்று தொற்றுநோய் வல்லுநர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் துறை மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் நேற்று இதுபற்றி கருத்து கூறினார்.
சீனா தன்னுடைய எல்லைகளை வரும் ஜனவரி 8ஆம் தேதியன்று திறந்துவிடலாம் என்று திட்டமிடுகிறது.
சீனாவில் இருந்து வரும் பயணிகளைப் பொறுத்தவரை, இப்போதைய கொவிட்-19 விதிமுறைகளே தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்று சிங்கப்பூர் தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூருக்கு மிரட்டல் ஏற்படக்கூடிய இரு வகை சாத்தியங்கள் உள்ளன. ஒன்று சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்று மிரட்டல். இது மிகவும் குறைவாகவே இருக்கும்.
மற்றொன்று சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி என்று அவர் விளக்கம் அளித்தார்.
"சீனாவில் இருந்து இங்கு வரக்கூடிய பயணிகள், இலேசான தொற்று இருந்தால்கூட உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும் என்ற சிந்தனையுடன் இருப்பார்களேயானால், நமக்கு பிரச்சினை ஏற்படும்.
"ஆனால், அத்தகைய பயணிகளுக்குச் சில நிபந்தனைகளை எடுத்துச் சொல்லி அதன் மூலமாகவே நாம் நிலவரத்தைச் சமாளித்துவிடலாம் என நான் கருதுகிறேன்," என்றாரவர்.

