சிங்கப்பூரில் மக்கள் உட்கொள்ளும் உணவில் கலந்துள்ள உப்பைக் குறைப்பதற்காக சுகாதார மேம்பாட்டு வாரியம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அவற்றின் விளைவாக வீரியம் குறைந்த உப்பை வாங்குவதில் மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்து இருக்கிறது.
உள்ளூரிலேயே வீரியம் குறைந்த உப்பை உருவாக்கி அதை 2023ல் அறிமுகப்படுத்த ஏதுவாக பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் சேர்ந்து தான் செயல்பட்டு வருவதாக இந்த வாரியம் தெரிவித்தது.
ஃபேர்பிரைஸ், ஷெங்சியோங் போன்ற பேரங்காடிக் கடைகள் கே-சால்ட் என்ற வீரியம் குறைவான உப்பை அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தின.
சிங்கப்பூரில் மக்கள் பயன்படுத்தக்கூடிய உப்பின் அளவை அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 15% குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3,600 மில்லி கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து இருக்கும் 2,000 மில்லி கிராம் என்ற அளவைவிட மிகவும் அதிகமாகும்.
உணவில் அளவுக்கு அதிகமாக உப்பைச் சேர்த்துக்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
இதனிடையே, 14 பயனீட்டாளர்களை அணுகிக் கேட்டபோது, வீரியம் குறைந்த உப்பு பற்றி தங்களுக்குத் தெரியும் என்று கூறியவர்கள் இரண்டு பேர் மட்டுமே என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.