பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 444 பேரை காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்களில் 311 பேர் ஆடவர்கள். 133 பேர் பெண்கள் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
அந்தச் சந்தேகநபர்கள் 1,400க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அத்தகைய தில்லுமுல்லுகளுக்கு இலக்கானவர்கள் $15.7 மில்லியனுக்கும் அதிகத் தொகையைப் பறிகொடுத்து இருக்கிறார்கள்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு காவல்துறை தரைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை எடுத்த நடவடிக்கைகளை அடுத்து இப்போது புலன்விசாரணை நடந்து வருகிறது.
சந்தேக நபர்களுக்கு வயது 15 முதல் 80 வரை. அவர்கள் போலி மின்னஞ்சல்கள், கடன், வேலை, இணைய வர்த்தகம், அரசாங்க, சீன அதிகாரிகளைப் போல் நடிப்பது ஆகியவை தொடர்பான மோசடிகளையும் முதலீட்டு பாணியிலான மோசடிகளையும் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றியது, கள்ளப்பண விவகாரம், உரிமம் இல்லாமல் பணப்பட்டுவாடாச் சேவை வழங்கியது போன்ற சட்டவிரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. புலன்விசாரணை தொடர்கிறது.

