'யூத்லைன்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் இளையர் மனநல ஆலோசனைச் சேவை சென்ற ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.
தோ பாயோவில் உள்ள அகேப் வில்லேஜில் இது இயங்கி வருகிறது. இன, சமய பேதம் இன்றி 18 முதல் 35 வயது வரையிலானோருக்கு இலவசமாக ஆலோசனைச் சேவை வழங்குவது இதன் நோக்கம்.
இதில் 307 தொண்டூழியர்கள் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். இச்சேவை தொடங்கிய முதல் வாரத்தில் 170 பேர் உதவி கேட்டு அழைத்ததாகவும் மறுவாரத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்கானதாகவும் கூறப்பட்டது.
அழைத்த இளையர்கள் பெரும்பாலும் தனிமை, குடும்ப விவகாரங்கள், படிப்பு போன்றவை தொடர்பான சிக்கல்கள் இருப்பதாகக் கூறினர்.
இளையர்களின் தேவைகள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கும் வேளையில் மனநலப் பிரச்சினைகள்தான் அவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களாக இருக்கின்றன என்று 'யூத்லைன்' கூறியது.
சேவைக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டின் பிற்பாதிக்குள் ஐந்து மில்லியன் வெள்ளி நிதி திரட்ட இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.
பெரிய அலுவலகம், நிரந்தர ஊழியர்கள் ஆகிய அம்சங்களுக்கு இத்தொகை உதவும்.

