ஆ. விஷ்ணு வர்தினி
புத்தாண்டையும் பொங்கலையும் எதிர்நோக்கி ஏற்பாடாகி இருக்கும் மெகா இந்தியா எக்ஸ்போ கண்காட்சியானது இன்று முதல் ஞாயிறு இரவு வரை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும்.
புகழ்பெற்ற 'லவ் டுடே' தமிழ் திரைப்படத்தின் கதாநாயகர்களான பிரதீப் ரங்கநாதன், இவானா ஆகியோர் இன்று கண்காட்சியில் பங்குபெறுவர்.
அதை தவிர்த்து, இன்று சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கும் 'சிந்தியன்' பரிசளிப்பு விழா, சிண்டாவின் அறிமுக நிகழ்ச்சி, 'மெகா கேம்' விளையாட்டு ஆகியவையும் இடம்பெறும்.
நாள்தோறும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இந்த இலவச கண்காட்சி மக்களின் பார்வைக்காக இருக்கும். மொத்தம் 150 உள்ளூர், வெளியூர் வர்த்தகங்கள் இக்கண்காட்சியில் பங்குபெற உள்ளன.
இந்தியாவில் ஹைதராபாத், ஜெய்பூர், புதுடெல்லி முதலிய பல்வேறு மாநிலங்களில் இயங்கும் வர்த்தகங்களின் பொருட்களையும் சேவைகளையும் கண்காட்சிக்கு வருகையளிக்கும் மக்கள் அணுகலாம்.
ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அறைகலன்கள் முதலியவற்றை வழங்கும் இக்கண்காட்சியில், புது வரவுகளையும் வேறுபட்ட வடிவமைப்புகளையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.
ஷாபாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு மக்களை பலதரப்பட்ட பொருட்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, உள்ளூர் வெளியூர் வர்த்தகங்கள் சந்திப்பதற்கான தளமாகவும் விளங்க முயற்சி செய்துள்ளது.
புது கூட்டுறவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை இங்கு வர்த்தகங்கள் கண்டறியக்கூடும் என்று கூறுகிறது, ஷாபாஸ் நிறுவனம்.

