இரவில் வெளியே செல்ல வலியுறுத்திய மூதாட்டியைக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்கு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மறதிநோயால் பாதிக்கப்பட்ட திருவாட்டி லியோங், சென்ற ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி இரவில் வெளியே செல்லவேண்டும் என்று பணிப்பெண் யாத்தியிடம் கூறினார்.
வெளியே மிகவும் இருட்டாக இருக்கிறது என்று விளக்கிய பிறகும் மூதாட்டி அடம்பிடித்ததாகக் கூறப்பட்டது. அதனால் யாத்தி அவரது கன்னங்களைப் பிடித்து, தாடையை அழுத்தி அமைதிப்படுத்த முயன்றார்.
தனக்கு அப்போது தலைவலி இருந்ததாகவும் தன்னால் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்றும் கூறிய யாத்தி, மூதாட்டியின் முகத்தை விரல்களால் அழுத்தித் தேய்த்ததுடன் சில முறை லேசாகத் தட்டியதாகவும் கூறினார்.
மறுநாள் திருவாட்டி லியோங்கின் முகத்தில் சிராய்ப்புக் காயங்கள் தென்படவே அவரது மகனைத் தொலைபேசியில் அழைத்த பணிப்பெண், மூதாட்டி கீழே விழுந்துவிட்டதாகப் பொய்யுரைத்தார்.
மருத்துவர் சந்தேகப்பட்டதால் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளைப் பார்த்த மகன், யாத்தியின் நடவடிக்கைகளைக் கண்டுபிடித்தார். பின்னர் காவல்துறையினரிடம் யாத்தி உண்மையை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திலும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

