சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு இம்மாதம் 22, 23ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக நேற்று பல்வேறு அறப்பணி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அவற்றில் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களும் நன்கொடையாளர்களும் கலந்துகொண்டனர்.
வருடாந்திர ஃபூ தாய் நிகழ்ச்சியின் மூலம் 6,000 குடும்பங்களுக்கும் 2,500 முதியோருக்கும் 8,500க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் உணவுப்பொருள்களும் பானமும் இதர பொருள்களும் இருக்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் உள்ளிட்ட தொண்டூழியர்கள் நேற்று நாடு முழுவதும் பல வீடுகளுக்கும் சென்று அந்தப் பைகளை வழங்கினார்கள்.
அன்பளிப்புப் பையில் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் அடங்கி இருக்கின்றன.
குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய செலவு கணிசமாகக் குறையும் என்று சமூக உண்டியல் தலைவர் சியூ சுடாட் கூறினார்.
சிறப்பு தேவையுள்ள சிறார்கள், பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ள இளையர்கள், உடற்குறையாளர்கள், மனநலப் பிரச்சினை உள்ளவர்கள், உதவி தேவைப்படும் நிலையில் உள்ள குடும்பங்கள், முதியவர்கள் பலருக்கும் உதவிக்கரம் நீட்டப்பட்டது.
சிங்கப்பூர் புத்திஸ்ட் லாட்ஜ் அமைப்பு தலா $250 அடங்கியுள்ள ஆங்பாவை நேற்று 3,000க்கும் மேற்பட்ட முதியோருக்கு வழங்கியது.
இந்த அமைப்பு சிங்கப்பூரின் ஆகப் பழைய அறப்பணி அமைப்புகளில் ஒன்றாகும். 1949 முதல் இந்த அமைப்பு ஆங்பாவை வழங்கி வருகிறது. இது நாளை முதல் மேலும் 2,500 பேருக்கு ஆங்பாவை வழங்கும்.
முதியோர் விடுதிகளில் வசிக்கும் 8,000க்கும் மேற்பட்டோருக்கு தலா $10 உடன் கூடிய ஆங்பாவை வழங்கும்.
இந்த அமைப்பின் அறப்பணி நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார்.
குவீன்ஸ்டவுனில் வசதி குறைந்த 250 பேர் மளிகைக் கடைகளுக்குத் தொண்டூழியர்கள் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கிக் கொள்ளத் தோதாக தலா $50 மதிப்புள்ள ஷெங் ஷியோங் பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $12,500 என்று தெரிவிக்கப்பட்டது.

