அப்பர் சிராங்கூன் வட்டாரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால் இரு ஆடவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அப்பர் சிராங்கூன், பார்ட்லி சாலை சந்திப்பில் இரண்டு அடுக்கு பேருந்தும் டாக்சியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் விபத்து குறித்து அழைப்பு கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
58 வயது பேருந்து ஓட்டுநரும் 67 வயது டாக்சி ஓட்டுநரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
நேராக சென்றுகொண்டிருந்த மஞ்சள் நிற டாக்சியை இடது பக்கத்திலிருந்து திரும்பும் பேருந்து மோதுவதை பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்ட காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கூறியது.
பேருந்து ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.