காலமான முன்னாள் தலைமை நீதிபதி யோங் பங் ஹாவ் குடும்பம் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக (எஸ்எம்யு) சட்டப்பள்ளிக்கு $20 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.
அந்தத் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஆய்வுப் பேராளர்கள் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஆய்வு நிதி ஒன்றும் ஏற்படுத்தப்படும். எஸ்எம்யு விடுத்த அறிக்கை இதனைக் கூறியது.
திரு யோங் 2020 ஜனவரியில் மரணம் அடைந்தார். அதையடுத்து 2021ல் எஸ்எம்யுவின் சட்டப்பள்ளிக்கு யோங் பங் ஹாவ் சட்டப் பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது. அந்தப் பள்ளியின் 15வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்கொடை வழங்கப்பட்டது.
திரு யோங் 2008லிருந்து 2010 வரை இந்தப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் 2010 முதல் 2015 வரை வேந்தராகவும் சேவையாற்றி இருக்கிறார்.
பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் ஆலோசனைக் கழகத்தை நிறுவிய திரு யோங், 2007 முதல் 2011 வரை அதன் தலைவராகவும் செயலாற்றி அந்தப் சட்டப்பள்ளி பாடத் திட்டத்தை உருவாக்க பெரிதும் உதவினார்.
தன்னுடைய கணவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த நன்கொடையை வழங்கி இருப்பதாக திருவாட்டி யோங் வெய் வூ தெரிவித்தார்.

