அப்பர் சிராங்கூனில் சாலை சந்திப்பு ஒன்றில் டாக்சி ஒன்றுடன் மாடிப் பேருந்து ஒன்று மோதிவிட்டது. அதன் விளைவாக இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த விபத்தைக் காட்டும் காணொளியை எஸ்ஜி ரோடு விஜிலண்ட் அமைப்பு ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது.
அந்த விபத்து பற்றி ஜனவரி 5ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுநரான 58 வயது ஆடவரும் டாக்சி ஓட்டுநரான 67 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
பேருந்து ஓட்டுநர் புலன்விசாரணையில் உதவி வருவதாகவும் விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
அந்த விபத்து பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தற்காப்புப் படை தெரிவித்தது.
இவ்வேளையில், அந்த விபத்தில் பேருந்துப் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்றும் அது பற்றி தான் புலன்விசாரணை நடத்தி வருவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.
அப்பர் சிராங்கூன் ரோடும் பார்ட்லி ரோடும் சந்திக்கும் இடத்தில் பச்சை விளக்கு எரிந்தபோது டாச்சி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதன்மீது மோதிவிட்டது என்று அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் திருவாட்டி கிரேஸ் வூ கூறினார்.

