உலகின் மிகப் பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் இப்போது எலோன் மஸ்க் என்ற தனிநபரின் சொந்த சொத்தாக ஆகி இருக்கிறது. எலோன் மஸ்க் வசம் அந்த நிறுவனம் வந்த உடனேயே அவர் ஆட்குறைப்பைக் கையில் எடுத்தார்.
டுவிட்டரில் உலகளாவிய நிலையில் இடம்பெறக்கூடிய தகவல்களைத் தரச் சீரமைக்கும் பொறுப்பில் இருக்கும் நம்பிக்கை, பாதுகாப்பு ஊழியர் அணி ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், அந்த அணியிலும் வெறுப்புப் பேச்சு, அலைக்கழிப்பு ஆகியவை தொடர்பான ஊழியர் அணி யிலும் மேலும் ஆட்குறைப்பு இடம்பெற்று இருக்கிறது.
இதன் காரணமாக டப்ளின், சிங்கப்பூர் டுவிட்டர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை இரவில் குறைந்தபட்சம் மேலும் 12 பேர் வேலை இழந்ததாக தெரியவந்துள்ளது.
ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான டுவிட்டர் பக்க நேர்மை துறை தலைவராக இருந்த நூர் அஸ்ஹார் ஐய்யூப், வருவாய் கொள்கைக்கான மூத்த இயக்குநர் அனலுசியா டோமின்குஸ் அவர்களில் இருவர்.
டுவிட்டரின் பொய்த் தகவல், கொள்கை, உலக கோரிக்கை, அரசு ஊடகம் ஆகியவற்றைக் கையாளும் குழுவைச் சேர்ந்தவர்களும் ஆட்குறைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

