சென்ற ஆண்டு இறுதிவாக்கில், சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு கடைகளில் கிடைக்கும் சில வழக்கமான மருந்துகளுக்கு நிலவிய தட்டுப்பாடு, தற்போது குறைந்துள்ளது. அந்த மருந்து களுக்கான தேவை மட்டுப்பட்டதால், இருப்பு மேம்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல்வகை கிருமித் தொற்றுகள் அதிகமாக ஏற்பட்டதால், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சளி, காய்ச்சல், இருமல் மருந்துகளுக்கான தேவை அதிகரித்தது. அதனால் சில இடங்களில் தற்காலிகமாக பற்றாக்குறை நிலவியதாக டாக்டர் ஜனில் குறிப்பிட்டார். ஆனால், உயிர்வாயு மானிகள், உயிர்வாயு ஏற்றக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களின் இருப்பு சிங்கப்பூரில் தேவையைச் சமாளிக்கும் அளவுக்கு சென்ற ஆண்டில் போதுமானதாக இருந்தது.
மேலும், கொவிட்-19 கிருமி யுடன் வாழவும் மற்ற நோய் களைப் போலவே அதையும் மக்கள் கருதவும் பழகிக்கொள்ளும்போது, அவர்கள் பயத்தில் மருந்துகளை வாங்கிக் குவிக்கும் சாத்தியம் குறையும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரூ ஆகியோரின் கேள்விகளுக்கு டாக்டர் ஜனில் நேற்று மன்றத்தில் பதில் அளித்தார்.
நல்ல உடல்நிலையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கொவிட்-19 தொற்றும்போது சளியை இலகுவாக்கி சுவாசக் குழாயிலிருந்து வெளியேற்றும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளத் தேவை இருக்காது என்று அவர் விவரித்தார்.
"பிரபல நிறுவனங்களின் மருந்துகளைத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவான மருந்துகள் போதுமானதாக இருக்கும்," என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

