நிலத்துக்கான விலையை சேர்க்காத வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் விலைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்று தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் முன்வைத்துள்ள பரிந்துரை, மேம்போக்காக நன்றாய் இருப்பது போல தெரியலாம் என்றும் அது பொருத்தமற்ற வாதம் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் (அல்ஜுனிட்) ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் விடையளித்தபோது திரு லீ அவ்வாறு சொன்னார்.
"அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற வாதம். நீண்ட காலமாக நடப்பில் உள்ள, ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலமதிப்பீட்டுக் கோட்பாடுகளின் முன்னே அது செல்லாது," என்ற அமைச்சர், திரு லியோங்கின் அணுகுமுறை சிங்கப்பூருக்கு ஆபத்தானது என்றார். கட்டுமானச் செலவு, ஒவ்வொரு வட்டாரத்துக்கான வேறுபாடு ஆகியவை மட்டும் வீவக வீட்டு விலையில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று திரு லியோங் டிசம்பரில் கூறியிருந்தார்.
"வரி விதிக்காது, வருவாய் பெற வேறு வழி காணாது வீவக வீடுகளைக் குறைந்த விலைக்கு அளிக்கலாம் என்று கூறுவதன்வழி நமது நாட்டின் இருப்பு நிதியை சூறையாட அவர் விரும்புகிறார்," என்றார் திரு லீ.

