சிங்கப்பூரில் வீடுகளில் ஏற்படும் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் வீடுகளில் 1,235 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. சென்ற ஆண்டு புதிவான எண்ணிக்கை 934 ஆகும்.
அதே காலகட்டத்தில் மின்சாரம் தொடர்பான தீச்சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை.
ஆண்டுதோறும் 250லிருந்து 300 வரையிலான அத்தகைய தீச்சம்பவங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
சென்ற ஆண்டு மின்சாரம் தொடர்பான காரணங்களால் வீடுகளில் 257 தீச்சம்பவங்கள் ஏற்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் ஷ தெரிவித்தார்.
புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு இணைப் பேராசிரியர் ஷ நாடாளுமன்றத்தில் நேற்று பதில் அளித்தார்.
2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை, வீடுகளில் தீ மூண்டதற்கான முக்கியக் காரணங்களில் அதிக மாற்றம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமைக்கும்போது கவனமின்றி இருப்பது, சிகரெட் உள்ளிட்ட பற்றவைக்கப்பட்ட பொருள்களை சரியாக அணைக்காமல் வீசி எறிவது, கோளாறு உள்ள மின்சாரக் கம்பிகளைக் கொண்ட பொருள் களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை காரணங்களில் சில.
தீச்சம்பவங்களுக்கு எதிரான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை குடியிருப்பாளர்களிடையே அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை எடுத்து வருவதாகவும் இணைப் பேராசிரியர் ஷ தெரிவித்தார்.

