சென்ற ஆண்டு மே மாத நில வரப்படி, வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 2,300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் சம்பளத்துக்கு அரசாங்கம் ஆதரவு தரும் அத்திட்டம் முன்னாள் குற்றவாளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து அத்தகையோரை வேலைக்கு எடுக்க சிங்கப்பூருக்கான மஞ்சள் நாடா இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற நிறுவனங்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் டாக்டர் டான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் வரும் மார்ச் மாதம் நிறுத்தப்படும்.
அதற்குப் பிறகும் முன்னாள் குற்றவாளிகளை வேலைக்கு எடுக்குமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளை அரசாங்கம் ஆலோசித்து வருவதாக டாக்டர் டான் கூறினார்.
சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுக்குமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பாக, மூத்த ஊழியர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வது இலக்கு.
2020 டிசம்பர் மாதம் இத்திட்டம் முன்னாள் குற்றவாளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.

