கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்கு செல்ல பிப்ரவரியிலிருந்து மீண்டும் பதிந்துகொள்ள முடியும். ஹஜ் யாத்திரைக்காக இவ்வாண்டு சிங்கப்பூருக்கு 900 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொவிட்-19க்கு முன்பிருந்த எண்ணிக்கைக்கு இது சமமானது என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று முன்தினம் தெரிவித்தது.
MyHajSG எனும் புதிய இணையத்தளத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து ஹஜ் யாத்திரைக்கான முன்பதிவை முஸ்லிம்கள் செய்யலாம் என்று முயிஸ் கூறியது.
ஹஜ்ஜுக்கு செல்வதன் தொடர்பிலான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான நடைமுறையை யாத்திரிகர்களுக்கு எளிதாக்குவதை MyHajSG தளம் இலக்காக கொண்டுள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு முதலில் 407 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த எண்ணிக்கை பிறகு 900ஆக உயர்த்தப்பட்டது.

