பதினொரு வயதுச் சிறுமியைப் பின்தொடர்ந்து, அவளுடைய வீட்டிற்குள் புகுந்து மானபங்கம் செய்த மனிதவள அமைச்சின் குடியிருப்பு விவகார அதிகாரியான 57 வயது லோ ஜின்னுக்கு நேற்று ஓராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2020 அக்டோபர் 19ஆம் தேதி, தோ பாயோவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுமியும் அவளுடைய எட்டு வயது தம்பியும் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
குற்றம் சாட்டப்பட்ட லோ, அவ்விருவரையும் விளையாட்டு மைதானத்தில் புகைப்படம் எடுத்து அன்று மாலை 5.30 மணி அளவில் அவர்களை பின்தொடர்ந்தார்.
அவ்விருவரையும் மின்தூக்கியில் பின்தொடர்ந்த லோ, அவர்கள் வெளியேறியபோது தாமும் சேர்ந்து வெளியேறினார். அவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டிற்குள் லோ நுழைந்தார். அப்போது அச்சிறுவர்களின் பெற்றோர் வீட்டில் இல்லை.
சட்டென்று வீட்டிற்குள் நுழைந்த லோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, அன்னியர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர் எச்சரித்ததை நினைவுகூர்ந்து, அவரை உடனடியாக வெளியேறும்படி கூறினார்.
தாம் எடுத்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டிய லோ, அவளை மானபங்கப்படுத்தினார். சிறுமி அழத் தொடங்கியவுடன் லோ அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையிடம் தமக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமி விவரித்தார். லோ 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

