வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வருங்கால தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் விவேக சீருடையைப் பெற வாய்ப்புள்ளது. அதிக வெப்பத்தை முன்கூட்டியே உணர்ந்து, கண்காணிக்கும் வகையில் சீருடை அமைந்திருக்கும். அதற்கான உணர்கருவி அந்த சீருடையுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
வீரர்கள் எந்த அளவிலான வெப்பநிலையில் உள்ளனர் என்பதை அவர்களின் தளபதிகள் கண்காணித்து ஆபத்தில் சிக்கக்கூடியவர்களை விரைந்து அடையாளம் காண இந்த வசதி கைகொடுக்கும். புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வெப்பத்தடுப்பு மீள்திறன் மற்றும் செயல்பாட்டு மையத்தின் யோசனைகளுள் இந்த சீருடையும் ஒன்று.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் நேற்று இந்த மையம் திறக்கப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், டிஎஸ்ஓ தேசிய சோதனைக்கூடம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் இம்மையம் உருவாகி உள்ளது.

