தென்கொரியாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹியுண்டாயின் சிங்கப்பூர் பிரிவு இங்குள்ள வாகன ஒன்றுசேர்ப்புத் தொழிற்சாலையில் இருந்து 'ஐயோனிக் 5' என்னும் மின்சார காரை இவ்வாண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்ய உள்ளது.
அறிமுகம் செய்ய உள்ள முதல் 100 கார்களுக்கான பதிவுஎண்ணுக்கான அறப்பணி ஏலத்தை ஹியுண்டாய் சிங்கப்பூர் நடத்த உள்ளது. இந்த 100 கார்
களும் தென்கொரியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பாகங்கள் இங்குள்ள தொழிற்சாலையில் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை.
'EVS' என்னும் முன்னெழுத்துக்களுடன் கூடிய சிறப்புப் பதிவெண்ணை இந்த கார்கள் கொண்டிருக்கும். சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மின்சார வாகனம் என்பதை இந்த எழுத்துகள் குறிக்கும்.
பதிவெண் ஏலத்தின் மூலம் அறப்பணிகளுக்காக $400,000 தொகையைத் திரட்டமுடியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.
சிங்கப்பூரின் முதல் வாகன பாகங்கள் ஒன்றுசேர்ப்பு தொழிற்சாலைக்கான தளமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி
வரும் ஜூரோங்கில் ஹியுண்டாய் மோட்டார் குழு புத்தாக்க மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹியுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் புத்தாக்க விற்பனைக் குழுமத் தலைவர் ஏன்டி காங் தெரிவித்தார்.
முன்னர் திட்டமிட்டபடி பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே நிறைவுபெற்றிருக்க வேண்டும். கொவிட்-19 சூழலால் பணிகள் தாமதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முழுமையாக வர்ணம் பூசப்பட்ட காரின் உருவ பாகத்தை இந்தோனீசியாவில் இருந்தும் இதர பாகங்களை தென்கொரியாவில் இருந்தும் இங்குள்ள தொழிற்சாலை இறக்குமதி செய்யும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் திரு காங் தெரிவித்தார்.
தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்ததும் தானியக்கத்திற்கான பாகங்களை சிங்கப்பூரிலிருந்து பெற ஹியுண்டாய் முயற்சி எடுக்கும் என்றார் அவர். 2025ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டு ஒன்றுக்கு 30,000 வாகனங்களைத் தயாரிக்க இத்தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட இருக்கும் 'ஐயோனிக் 5' கார்
களைத் தவிர்த்து 'ஐயோனிக் 6' மற்றும் புத்தம்புதிய 'கோனா' மின்சார கார்களையும் உருவாக்க ஜூரோங் தொழிற்சாலை எண்ணம் கொண்டுள்ளது.

