இவ்வாண்டு முதல் அனைத்துப் புதிய இயற்கை எரிவாயு ஆலைகள் ஏறத்தாழ 10 விழுக்காடு கூடுதலான ஆற்றலையும் ஹைட்ரஜனுக்கு இணக்கமானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
95 விழுக்காடு இயற்கை எரிவாயுவை இத்துறை நம்பியிருக்கிறது. தற்போது 40 விழுக்காடு கரிம வெளியேற்றத்துக்கு மின்சாரத்துறை காரணமாக இருக்கிறது. எனவே, புதிய அணுகுமுறை மின்சாரத்துறையின் கரிம வெளியேற்றத்தைக் குறைத்து கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை அடைவதே இலக்கு.
சிங்கப்பூரின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முக்கியமான புதிய, வலுப்படுத்தப்பட்ட ஆலைகளில் கரிம வெளியேற்ற வரம்பு விதிக்கப்படும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கரிம வெளியேற்றம் குறைவதோடு நம்பகமான, தடையற்ற மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று ஆணையத்தின் கொள்கை, திட்டமிடல் இயக்குநர் திரு லாவ் கீ யோங் கூறினார்.
புதிய, வலுப்படுத்தப்பட்ட ஆலைகள் குறைந்தது ஹைட்ரஜனுடன் குறைந்தது 30 விழுக்காடு இணக்கமானவையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது 100 விழுக்காடாக உயர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தரநிலையைக் கடுமையாக்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தொழில்துறையுடன் ஆணையம் ஆலோசனை நடத்தும்.
சிங்கப்பூரில் தற்போது கூடுதல் ஆற்றல் உள்ள ஆலைகள் இருப்பதால் கரிம வெளியேற்றம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் கரிம வெளியேற்றம் ஏறத்தாழ 14 விழுக்காடு குறைந்ததாக ஆணையத்தின் இணையத்தளம் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

