ஆ. விஷ்ணு வர்தினி
அனுதினமும் ஜோகூர் பாருவில் உள்ள தனது இல்லத்திலிருந்து நார்த்புரூக்ஸ் உயர்நிலைப் பள்ளிக்குப் பயணம் செய்து வந்தார் மாணவர் நமர் சிங் மன். ஆனால், கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் மலேசியாவிலேயே முடங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
அந்தச் சூழல் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் 2020லிருந்து 2021 வரை ஓராண்டுக்கும் மேலாக அவரால் சிங்கப்பூருக்கு வர முடியாமல் போனது.
அச்சமயத்தில், இணையவழி பாடங்களே நமருக்கு கைகொடுத்து வந்தன. இத்தகைய தடைகளைத் தாண்டி, நேற்று 'ஓ' நிலை தேர்வில் தாம் எதிர்பார்த்த இலக்கை எட்டி தேர்ச்சி பெற்று மனநிறைவுடன் இருக்கிறார் நமர்.
"நேரடியாக வகுப்புகளில் பங்குபெற முடியாததால் வருத்தம் அடையவே செய்தேன். ஆனால், எனது வகுப்பு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் எனது கல்வி தடைபடாமல் இருக்க பெரிதும் உதவினர். நான் ஸூம் தளம் வழி பாடங்
களைக் கற்க அவர்கள் ஏற்பாடு செய்தனர்," என்றார் 16 வயது நமர். இணையவழி கற்றலினால், ஆய்வுக்கூடப் பாடங்களிலும், செயல்முறை சார்ந்த பாடங்களிலும் நமரால் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை. ஆனால், பாடங்களில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்குப் பள்ளி வேளைக்குப் பின்னரும் தனது ஆசிரியர்கள் தன்னை இணையம் வாயிலாகச் சந்தித்தது கைகொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டில் சிங்கப்பூர் திரும்பியபோது, தினமும் தாயார், இரு சகோதரிகளுடன் காலை 4 மணியளவில் எழுந்து, 5.30 மணியளவில் ரயிலில் ஏறி சிங்கப்பூருக்கு வருவதை நமர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் மாலை 6 மணியளவில், பள்ளி முடிந்து, பேருந்தில் ஜோகூருக்குத் திரும்பினார்.
இருப்பினும், களைப்பைப் பொருட்படுத்தாமல், பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல் பாடம் பயிலும் அவரது கனவு நனவாக்கியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார் நமர். இவ்வாண்டு, நீ ஆன் அல்லது சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவர் கணக்கியல் பாடம் பயில்வார். நமருடன், நேற்று 'ஓ' நிலை எனப்படும் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளை மொத்தம் 23,684 மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். 86.2 விழுக்காட்டு மாணவர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் இது 0.6 விழுக்காடு அதிகம்.
கடந்த ஆண்டைப் போலவே பெரும்பாலான மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
99.8 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களிலும் 96.6 விழுக்காட்டினர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளதாக சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் கூறியது.

