உலக வர்த்தகம் குறைந்தாலும் 2022ல் 577.7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது
சிங்கப்பூர் துறைமுகங்கள் வழியாக 2022ல் மொத்தம் 37.3 மில்லியன் 20 அடி கொள்கலன்கள் சென்று இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை, 2021ன் சாதனை அளவான 37.6 மில்லியன் கொள்கலன் அளவைவிட 0.7%தான் குறைவு.
உலகக் கொள்கலன் வணிகத்தில் சென்ற ஆண்டில் 3 முதல் 4% சரிவு இடம்பெற்றது. இருந்தாலும்கூட சிங்கப்பூர் துறைமுகங்கள் இரண்டாவது ஆகப் பெரிய கொள்கலன் எண்ணிக்கை சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.
இவற்றைக் கணக்கிட்டு பார்க்கையில் சிங்கப்பூரில் கையாளப்பட்டு இருக்கும் சரக்குகளின் அளவு 577.7 மில்லியன் டன் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறின.
உலகின் முக்கிய நாடுகளில் உற்பத்தியும் பயனீடும் சென்ற ஆண்டில் மெதுவடைந்தன.
இதனால் ஒட்டுமொத்த வர்த்தகமும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டன.
இருந்தாலும்கூட சிங்கப்பூர் துறைமுகம் மீள்திறனுடன் ஆற்றலுடன் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்று நிதி, போக்குவரத்து துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
மிக முக்கியமாக, உலகின் ஆகப் பெரிய இடைவழி கப்பல் சரக்கு போக்குவரத்து துறைமுகம் என்ற நிலையை சிங்கப்பூர் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனத்தின் புத்தாண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் பேசினார்.
கொவிட்-19 தொற்றின்போது சிங்கப்பூர் தனது தொடர்புகளை மேம்படுத்தியது. கப்பல் வழிகளுக்கான மைய துறைமுகம் என்ற தன்னுடைய நிலையை அது பலப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
இதன் மூலம் உலக பொருள், சேவை வழங்கீட்டுக் கட்டமைப்புகள் மீள்திறனுடன் திகழ அது உதவி இருக்கிறது.
அதேவேளையில், கடல்துறையில் கரிமக் கழிவுகளைக் குறைக்கும் வகையில் மாற்று எரிபொருள்களை விநியோகிப்பதில் சிங்கப்பூர் பல முன்னேற்றங்களைச் சாதித்து இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உலகப் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும்கூட சிங்கப்பூரின் கடல்துறை தொடர்ந்து வளர்ச்சியைச் சாதிக்கும் என்று தான் நம்புவதாக திரு சீ குறிப்பிட்டார்.
மின்னிலக்கமயம், கரிமக் கழிவைக் குறைப்பது ஆகியவற்றில் வலுவான ஆற்றல்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னணியில் திகழ வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

