பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காவல்துறை 355 பேரை விசாரித்து வருகிறது. அந்த மோசடிகளில் அப்பாவிகள் $5 மில்லியன் தொகையை இழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களுக்கு வயது 16 முதல் 78 வரை. அவர்கள் 918க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
முதலீட்டு மோசடிகள், வேலை, இணைய வர்த்தகம், இணையக் காதல், அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றுவது போன்ற பல்வேறு மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
வர்த்தக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் காவல்துறையின் ஏழு தரை நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் சேர்ந்து சென்ற டிசம்பர் 31ஆம் தேதி முதல் இந்த மாதம் 12ஆம் தேதிவரை இரண்டு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த நபர்கள் சிக்கினர்.
அவர்களில் 228 பேர் ஆண்கள், 127 பேர் பெண்கள்.
ஏமாற்றியது, பணத்தைச் சட்ட விரோதமாக கையாளுவது, உரிமம் இல்லாமல் பணப் பட்டுவாடா சேவை நடத்தியது ஆகியவற்றில் அவர்கள் ஈடுட்டு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
இதனையொட்டி அவர்களிடம் புலன்விசாரணை நடக்கிறது என்று காவல்துறை தெரிவித்தது.

