சிங்கப்பூரும் தென்கொரியாவும் சேர்ந்து செயல்பட்டு மின்னிலக்கப் பொருளியலில் வாய்ப்புகளை விரிவுபடுத்த இணங்கி இருக்கின்றன.
இதற்கு வகை செய்யும் உடன்பாடு நடப்புக்கு வருகிறது.
'கொரியா-சிங்கப்பூர் மின்னிலக்கப் பங்காளித்துவ உடன்பாடு' என்று குறிப்பிடப்படும் அந்த உடன்பாட்டில், சிங்கப்பூரின் இரண்டாவது வர்த்தக, தொழில் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்கும் தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் அன் டுக்கியுன்னும் சென்ற ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சிங்கப்பூரில் கையெழுத்திட்டனர்.
அந்த உடன்பாடு தொடர்பில் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் முழுமை அடைந்துள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
புதிய உடன்பாட்டின் விளை வாக இரு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு தடையில்லாத மின்னிலக்க வர்த்தகச் சூழலை உருவாக்கும்.
இரு நாட்டு நிறுவனங்களுக்கும் இடையில் மின்னிலக்கப் பொருளியலில் அதிக ஒத்துழைப்பு இடம்பெறும்.
இரு நாடுகளிலும் செயல்படும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தகவல்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
இரு நாடுகளும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும். அனைத்துலக இணையத் தளங்களுடன் தொடர்புகொள்ளவும் அவற்றுக்கு உதவிகள் கிடைக்கும்.
இணையத்தில் செயல்படும்போது இரு நாடுகளும் சட்டங்களையும் விதிமுறைகளையும் நிலைநாட்டி பயனீட்டாளர்களைப் பாதுகாக்கவும் உடன்பாட்டில் ஏற்பாடுகள் இருக்கின்றன.
இயந்திர மனிதன் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் மூன்று புரிந்துணர்வு குறிப்புகளிலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டு இருக்கின்றன.

