வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அது குறித்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
எதிர்கால பொருளியல் பிரகாசமாக இல்லாததால் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். புவிசார் அரசியல் பதற்றமும் ஓய்ந்தபாடில்லை.
இவை, சிங்கப்பூரர்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் கவலை அடையச் செய்துள்ளன.
கொவிட்-19 தொற்றுப் பிடி யிலிருந்து ஒரு வழியாக மீண்டு வந்துள்ள சிங்கப்பூர், மேற்கண்ட சவால்களால் பொருளியல் பாதிப்பு களைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக விமானத் துறை, உணவு மற்றும் குளிர்பானத்துறை போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய தனிப்பட்டவர்களும் ஊழியர்களும் நிறுவனங்களும் இந்தச் சிரமமான காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஆதரவு தொடர வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். குறுகிய, நீண்டகால உதவித் திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வுள்ள துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவின கவலைகளுக்கான உதவிகளை எந்த அளவு மேலும் மேம்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் சிந்தித்து ஆலோசித்து வருவதாக கடந்த ஜன வரியில் கூறியிருந்தார். இதற்காக சிங்கப்பூரர்களின் கருத்துகளும் அறியப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள லீ குவான் இயூ பொதுக் கொள்கையின் இணைப் பேராசிரியரான டெரன்ஸ் ஹோ, பொருளியல் மெதுவடைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் குடும்பங் களுக்கும் நிறுவனங்களுக்கும் மேலும் ஆதரவுகள் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறலாம் என்றார்.
பசுமை மாற்றம் போன்ற பொருளியல் கட்டமைப்பு மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மாற்றத்திற்கான ஆதரவு தொடர்ந்து தேவைப்படும் என்றும் குறைந்த வருமான ஊழியர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கும் ஊதியம் மற்றும் வேலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தேவை என்றும் அவர் கூறினார்.
"இருந்தாலும் காலவரையற்ற ஆதரவுக்கான எதிர்பார்ப்பு களைத் தவிர்க்க அரசாங்கம் விரும்புகிறது," என்றார் அவர்.
வர்த்தக நிறுவனங்களை சீரமைக்கவும் அவற்றின் ஆற்றலைப் பெருக்கவும் நீண்டகால முன்னுரிமைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
யுஓபி வங்கியின் மூத்த பொருளியல் நிபுணரான ஆல்வின் லியவ், அதிகரிக்கும் செலவினங்கள், பணவீக்கம் ஆகியவற்றை சிங்கப்பூரர்கள் சமாளிக்க கூடுதல் உதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்.
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பொருள் சேவை வரியின் தாக்கத்தைக் குறைப்பதற்காக 2020ஆம் ஆண்டில் முதல் முதலில் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் வெள்ளி முதல் ஒரு பில்லியன் வெள்ளி வரை உதவி அதிகரிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
தனிப்பட்டவர்களின் வருமான வரி விதிப்பிலும் மாற்றம் இருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர்.
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு சில நிறுவனங்கள் மீண்டு வருவதில் சிரமங்களை எதிர் நோக்குகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான வரு மானம் இல்லை. மேலும் இரண்டு ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த இயந்திரங்கள், கணினிகள், அடிப்படை வசதிகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தில் அவை உள்ளன. இதனால் கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு மீண்டு வர சிரமப்படும் நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி கிடைக்கும் என அவை பெரிதும் எதிர்பார்க்கின்றன.

