நோய்ப்பரவல் சூழலால் உருமாறி வருகிறது நம் நாட்டின் சுகாதாரத் துறை. 2030ஆம் ஆண்டுக்குள் 24,000 ஊழியர்களை சுகாதாரத் துறைக்கு ஈர்க்கும் இலக்குடன் மாணவர்களை இதற்காக தயார்படுத்தும் முயற்சியில், நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியின் உயிர் மருத்துவ அறிவியல் பட்டயப்படிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேம்பாடு கண்ட இந்த பாடத்திட்டத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இனி தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இரு கல்விப்பாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஓராண்டு காலத்திற்கு மாணவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவ மனையுடனான ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி யில் ஈடுபடலாம். அல்லது, செயல்முறை சார்ந்த உயிர் மருத்துவ அறிவியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம், 'தெமாசெக் லைஃப்சைன்சஸ் லெபாரட்டரி' முதலிய அமைப்புகளுடன் மாணவர்கள் இணையலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தில் ஆறு மாத கால வேலைப் பயிற்சியை அவர்கள் மேற்கொள்ளலாம்.
உருமாற்ற ஆராய்ச்சி, சுகாதார சேவை ஆராய்ச்சி, மருத்துவப் பரிசோதனை, நோயறிதல், மருத்துவப் புத்தாக்கம் ஆகிய ஐந்து அம்சங்கள் தொடர்பில் மாணவர்களுக்குக் கூடுதல் அனுபவம் கிடைக்கும்.
மூன்றாம் ஆண்டு மாணவரான கே. எஸ். கௌதம், மருத்துவம் படித்து எதிர்காலத்தில் இதயவியல் தொடர்பான மருத்துவராகும் கனவு கொண்டுள்ளார். பாடத்திட்ட மாற்றங்களால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கிட்டும் வாய்ப்பு, தனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறார்.
"நான் சிறுவயதாக இருந்தபோது என் தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவராகும் என் கனவுக்கு அந்தச் சம்பவமே வித்திட்டது. ஆனால், ஒரு மருத்துவரின் வாழ்க்கை எப்படி இருக்கும், எவ்வகையான சிரமங்களை அவர் எதிர்நோக்குகிறார், நெருக்கடிகளை எவ்வாறு கையாள்கிறார் ஆகியவை, நேரடி அனுபவத்தின்மூலம் மட்டுமே தெரிய வரும்," என்றார் கௌதம்.
குறிப்பாக, 'கிரிஸ்பர்' (CRISPR) எனப்படும் மரபணு திருத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஆவலுடன் தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய தொழில்நுட்பங்களை, மருத்துவக் கட்டமைப்புகளை நேரடியாகக் கையாள்வதன்மூலம் கற்றுக்கொண்டவற்றைச் செயல்படுத்தி பார்த்து, முக்கியமான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார், நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியின் உயிர் மருத்துவப் பாடத்துறைத் தலைவர் டாக்டர் சுஜித் தத்தா.
"ஆழமான புரிதலை ஏற்படுத்துவதும் நடைமுறை சிக்கல்களைக் கையாள மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் இப்பாடத்திட்ட மாற்றங்களின் நோக்கமாகும். மாறிவரும் சுகாதாரத் துறை சூழலில், மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுவது வாழ்க்கைத்தொழில் மீள்திறனே. மாணவர்களிடத்தில் அதை வலுப்படுத்த விரும்புகிறோம்," என்றார் அவர்.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

