பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களின் ஆரம்பச் சம்பளத்துக்கும் பலதுறைத்தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்து முடித்தவர்களின் ஆரம்பநிலைச் சம்பளத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க சிங்கப்பூர் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் இடைநிலை ஆரம்பச் சம்பளம், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்தவர்களின் சம்பளத்தைவிட இரட்டிப்பாகவும் பலதுறைத் தொழில்கல்லூரியில் படித்தவர்களைவிட 50 விழுக்காடு அதிகமாகவும் உள்ளது என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
சம்பள ஏற்றத்தாழ்வு கடந்த பத்தாண்டுகளில் குறைந்து வந்தபோதும், சிங்கப்பூர் வேலைகளுக்கு ேமலும் நியாயமான, சமநிலையான முறையில் ஊதியம் அளிப்பதன் அவசியத்தை திரு வோங் சுட்டிக்காட்டினார்.
வேலைகள் தொடர்பாக கொள்கை ஆய்வுக் கழகத்தில் நடந்த மாநாட்டில் துணைப் பிரதமர் நேற்று உரையாற்றினார்.
சம்பளங்களில் சில வேறு பாடுகள் இருந்தாலும், அதிக இடைவெளியால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றார் அவர்.
சிலர் தாங்கள் படித்த துறைகளில் வேலைக்குச் செல்வதில்லை. சிலர் தங்கள் திறன்களுக்கும், விருப்பத்துக்கும் ஏற்பில்லாத துறையில் பட்டக்கல்வி பயிலும் அழுத்தத்தில் இருக்கலாம் என்றார் திரு வோங்.
"சரியான திறன்கள் கொண்ட சரியான ஆள்களை சரியான வேலைகளில் அமர்த்துவது சிக்கலாகிறது. இதுவெல்லாம் சேர்ந்து எலியோட்டமும் ஏட்டுக் கல்விச் சான்றிதழ்களைத் துரத்திச் செல்வதும் தொடரும் உணர்வை அதிகமாக்குகிறது. இவற்றால் சிங்கப்பூரர்களின் கவலைகளும் பதற்றமும் கூடுகிறது," என்று திரு வோங் விவரித்தார்.
"இவற்றை சரிசெய்யாவிட்டால். மக்கள் கோபம் அடையலாம். அல்லது இங்குள்ள கட்டமைப்பு நியாயமற்றது என்று நினைக்கலாம். அதனால் மற்ற சில நாடுகளைப்போல இங்கும் சமூக ஒற்றுமை குலையக்கூடும்," என்று அவர் எச்சரித்தார்.
எனவே, சிங்கப்பூர் தரமான வேலைகளில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வேலைத் துறையையும் நடைமுறைக்கு ஏற்றதாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பாதையையும் பயனுள்ளதாக்க வேண்டும். இதன் பகுதியாக தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழில்கல்லூரிகளில் படித்தவர்களுக்கான வேலைகளில் சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு வோங் கூறினார்.
அத்தகைய மாணவர்கள் தொழில்துறைகளில் அனுபவம் பெறுவதற்கும் தாங்கள் தேர்வுசெய்த துறையில் வேலை செய்து கொண்டு படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் வர்த்தக நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஆரம்பநிலை ஊதியம், தொழில் முன்னேற்றம் போன்ற பிரச்சினைகளைக் களைய வேண்டும் என்றார் திரு வோங்.

