புதிய தனியார் வீடுகளின் விற்பனை டிசம்பரில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது. குறைந்த புது காண்டோமீனிய அறிமுகம், உயரும் வட்டி விகிதங்கள், 2023ல் புதிய திட்டங் களுக்குக் காத்திருப்போர் போன்றவை நிலவியபோதும் இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
எக்ஸிகியூட்டிவ் காண்டோமீனிய வீடுகள் தவிர்த்து, சொத்து மேம்பாட்டாளர்கள் டிசம்பரில் 170 வீடுகளை விற்பனை செய்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று கூறியது. நவம்பரில் விற்பனையான 260 வீடுகளுடன் ஒப்பிட்டால் இது 34.6% குறைவு.
உலகப் பொருளியல் நெருக்கடி காரணமாக 2009 ஜனவரியில் 108 வீடுகள் விற்பனை ஆகின. அதன் பிறகு தனியார் வீட்டு விற்பனை இவ்வளவு குறைந்தது இதுவே முதன்முறை.
ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் 2021 டிசம்பரில் 650 வீடுகள் விற்கப்பட்டன. அதை ஒப்பிடும்போது சென்ற மாதம் 74 விழுக்காடு சரிவு ஏற்பட்டது.
டிசம்பரில் 45 காண்டோமீனிய வீடுகளே அறிமுகம் கண்டன.
2007இல் நகர மறுசீரமைப்பு ஆணையம் சந்தைப் புள்ளிவிவரங்களை வெளியிடத் தொடங்கியதிலிருந்து இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.
ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில், 2021 டிசம்பரில் அறிமுகமான 383 வீடுகளுடன் ஒப்பிடும்போது இது 88.3% குறைவு.
எனினும் எக்ஸிகியூட்டிவ் காண்டோமீனிய வீடுகளை உள்ளடக்கும்போது டிசம்பரில் 638 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. நவம்பரில் விற்பனையான 446 வீடுகளைவிட இது 43% அதிகம்.
2022 முழுவதும், புதிய வீடு களின் விற்பனை, எக்ஸிகியூட்டிவ் காண்டோமீனிய வீடுகள் தவிர்த்து, 45 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைந்தது. அத்தகைய 7,153 புதிய தனியார் வீடுகளே விற்பனை ஆகின. 2008ல் அத்தகைய 4,264 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. அதற்கு அடுத்து இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
குறைவான புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது, இரண்டு சொத்து விலை தணிப்பு நடவடிக்கைகள், நிச்சயமற்ற பொருளியல் சூழலில் அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் ஆகியவை இதற்குக் காரணம் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

