பொதுப் பேருந்து நடத்துநரான கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் மேலும் தனது 50 பேருந்துகளின் மேல் கூரையில் மிகவும் மெலிதான சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்தவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முன்னோட்ட சோதனை வெற்றி பெற்ற பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்தம் 52 டீசல் பேருந்துகளில் 1.6 மில்லிமீட்டர் தடிமானமுள்ள சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்படும். இந்தப் பேருந்துகள் அதன் 31 சேவைகளில் ஓடவிடப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேருந்துகள் எந்தவொரு தனிச் சேவைக்கும் ஒதுக்கப்படாது. கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் வைத்திருக்கும் 450 பேருந்துகளில் 11% பேருந்துகளில் மட்டுமே இத் தகடுகள் பொருத்தப்படும்.
52 பேருந்துகளிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டவுடன், கரிம வெளியேற்றம் ஆண்டுக்கு 200 டன் குறைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இது 43 பயணிகள் கார் வெளியேற்றும் கரிம வெளியேற்றத்துக்குச் சமமானது.
பேருந்தின் மேல்கூரையில் பொருத்தப்படும் சூரிய ஒளித் தகடு ஒன்று 20 கிலோகிராம் எடை கொண்டது. அது 1,000 வாட் எரிசக்தியை உற்பத்தி செய்யக்கூடியது. இது சிறிய சமையலறை அடுப்புக்குத் தேவையான எரிசக்திக்கு ஒப்பானது.
சூரிய ஒளித் தகடு, பேருந்தின் மின்கலத்தில் மின்னூட்டம் செய்து, எரிபொருளை மிச்சப்படுத்துகிறது.
பேருந்து இயந்திரம் முடக்கப்படும்போது, பேருந்தின் மின்கலம் பேருந்து இயக்கத்துக்கு உதவும், பேருந்துக்கு எரிசக்தி கொடுக்கும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முன்னோட்ட சோதனையில், ஆண்டுக்கு 3% முதல் 4% வரை எரிபொருளைச் சேமிக்க முடிந்தது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இது, ஓர் ஆண்டில் ஒரு பேருந்திலிருந்து வெளியாகும் 3.7 முதல் 4 டன் கரிம வெளியேற்றத்துக்குச் சமம்.
முதலில் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படவிருந்த சோதனை, கூடுதல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக நீட்டிக்கப்பட்டது என்றும் கோ-அஹெட் சிங்கப்பூர் கூறியது.
2040ஆம் ஆண்டுக்குள் பேருந்துகளில் 100 விழுக்காடு சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்தும் சிங்கப்பூரின் இலக்குக்கு தமது நிறுவனம் முழுமையான கடப்பாடு கொண்டுள்ளது என்று கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ தாம்சன் தெரிவித்தார்.

