உலகளாவிய அறிவியல் சமூகத்தினருக்கு துணைப் பிரதமர் ஹெங் கோரிக்கை
நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எப்படியிருந்தாலும் அறிவு மேம்பாடு தொடர்பில் உலகளாவிய அறிவியல் சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக இளம் விஞ்ஞானிகள் உச்சநிலை மாநாடு 2023ல் நேற்று அவர் உரையாற்றினர்.
பல்கலைக்கழகம் 11வது முறையாக ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு நாளை மறுநாள் வரை நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்புரையாற்றிய திரு ஹெங், வல்லரசுகளுக்கு இடையிலான போட்டாபோட்டியும் வாக்குவாதமும் அதிகரித்ததால் சில துறைகளில் ஒத்துழைப்பு குறைந்திருக்கிறது அல்லது முடங்கிவிட்டது என்று குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில், உலகின் ஆகச் சிறந்த அறிவாளிகளை ஒன்றிணைக்கும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு என்றார் அவர். இவர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ளலாம். உலகை அச்சுறுத்தும் சவால்களுக்குத் தீர்வுகாணலாம். எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எத்தகைய அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்கள் என்ற பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைக்க இவர்கள் முன்வரவேண்டும் என்று துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
எடுத்துக்காட்டாக சென்ற ஆண்டு இயற்பியலில் நோபெல் பரிசு வாங்கிய மூவரைத் திரு ஹெங் சுட்டினார்.
இயற்பியல் மேதைகளான ஆலன் ஆஸ்பெக்ட், ஜான் கிளாசர், ஆண்டன் ஸெய்லிங்கெர் மூவரும் முறையே பிரான்S, அமெரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
"இவ்வாறு வெவ்வேறு கலாசாரங்கள், நாடுகள், சமயங்கள் போன்றவற்றைச் சார்ந்தவர்களைப் பொது நன்மைக்காக இணைக்கும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு என்பதுதான் அதன் அழகே," என்றார் திரு ஹெங்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் திறம்படச் சமாளிப்பதில் அறிவியல் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது என்பதை அவர் குறிப்பிட்டார். இந்த வகையில் அனைத்துலக அறிவியல் சமூகம் மனிதகுலத்துக்கான நம்பிக்கையைக் கைகளில் ஏந்தியுள்ளது என்றார் திரு ஹெங்.
மாநாட்டில், 21 புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் உரைகள் இடம்பெறவிருக்கின்றன. இவர்களில் நோபெல் உள்ளிட்ட அனைத்துலக அளவில் புகழ்பெற்ற பரிசுகளை வென்றவர்களும் அடங்குவர்.
கடந்த ஈராண்டுகளாக மெய் நிகர் முறையில் இம்மாநாடு நடைபெற்றது. இவ்வாண்டு இதில் 29 நாடுகளைச் சேர்ந்த 350 பேர் நேரடியாகவும் 1,400 பேர் இணையம் வாயிலாகவும் பங்கேற்கின்றனர்.

