பிரசன்னா கிருஷ்ணன்
ஐம்பதுகளில் சிங்கப்பூரின் அடித்தளச் சூழலில் காற்பந்து வீரராகத் திகழ்ந்த 'போத்தாக்' சுப்பையா எனச் செல்லமாக அழைக்கப்படும் கருப்பையா சுப்பையா நேற்று காலமானார். அவருக்கு வயது 85.
ஜூரோங் வட்டாரத்தில் இருந்த ஒரு கம்பத்தில் பிறந்து வளர்ந்த திரு சுப்பையா, சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆகாயப் படையில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் என இவரின் தம்பி கே. கந்தசாமி தெரிவித்தார்.
பிரிட்டிஷ் படையினர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் வரை திரு சுப்பையா ஆகாயப் படையில் இருந்ததாகவும் திரு கந்தசாமி கூறினார்.
"இத்தகைய ஒருவரை அண்ணனாகப் பெற்றது நான் பெற்ற வரம். எனது வேலைச் சூழலால் அவர் (திரு சுப்பையா) உட்பட எனது குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனது.
"அவ்வப்போது தொலைபேசிவழி அவர் என்னுடன் பேசுவார். ஆனால் அதிக நேரம் பேசியதில்லை. பொதுவாகக் காற்பந்து விளையாட்டாளர்களுடன் மட்டும்தான் அவர் பழகுவார்," என்று குறிப்பிட்டார் திரு கந்தசாமி.
திரு சுப்பையாவிற்கு இரண்டு பிள்ளைகள், மூன்று பேரப் பிள்ளைகள், ஒரு கொள்ளுப் பேரப்பிள்ளை இருக்கின்றனர்.
இவரின் மனவுறுதியை நினைவுகூர்ந்தார் மகள் சாந்தா சுப்பையா.
"அவர் ஒரு பாசமான தந்தை, அன்பான மனிதர். எதையும் சொந்தமாகச் செய்ய விரும்புவார். குடும்பத்தாருக்கு எப்போதும் உணவு தயார்செய்து தருவார். அவர் மிகவும் சிறந்த தாத்தாவாகவும் இருந்தார். பேரப் பிள்ளைகளைத் தந்தையைப் போல் கவனித்துக்கொண்டார்," என்று திருவாட்டி சாந்தா பெருமையுடன் கூறினார்.
திரு சுப்பையாவின் மறைவுக்குக் காற்பந்து உலகிலும் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
திரு சுப்பையா மிகவும் அருமையான மனிதர் என்றும் காற்பந்தை மிகவும் நேசித்தவர் என்றும் கூறினார் வெங்கா எனப் பலரால் அழைக்கப்படும் உள்ளூரில் புகழ்பெற்ற காற்பந்து நிர்வாகி ஆர். வெங்கடாசலம்.
"வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் என்னைவிட அவருக்குத்தான் காற்பந்துமீது மோகம் அதிகம். சொந்தச் செலவில் பைனியர் ஆர்சனல் என்ற உள்ளூர் காற்பந்துக் குழுவை நடத்தினார்," என்றார் திரு வெங்கா.
திரு சுப்பையா, பலர் விரும்பிப் பார்க்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆர்சனல் குழுவின் ரசிகர் என்பதைக் குறிப்பிட்டார் சிங்கப்பூர் காற்பந்து பற்றிய நூலின் ஆசிரியர் ஏ. தியாகராஜு.
"ஆர்சனலைப் பற்றி அடிக்கடி பேசுவார். நீண்டகாலமாக அக்குழு லீக் கிண்ணத்தை வெல்லாததை நினைத்து வருத்தப்படுவார். இந்தப் பருவத்தில் ஆர்சனல் லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புஉள்ளது. ஆனால் அப்படி நடந்தால் அதைக் காண திரு சுப்பையா இருக்கமாட்டார் என்பது வருத்தம் தருகிறது," என்று கூறினார் திரு தியாகராஜு.
சிங்கப்பூரின் இளம் காற்பந்து வீரர்களுக்கு ஊக்கமாக விளங்கியவர் என்று போற்றப்படுகிறார் திரு சுப்பையா.

