'ஹோம்' எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் சமூகநல அமைப்பு, அதன் நிர்வாக இயக்குநரான தேஷி கில்லைத் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த அமைப்பிலிருந்து அவர் நிதியைக் கையாண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, 'ஹோம்' அந்நடவடிக்கையை எடுத்தது. அது குறித்து ஹோம் தனது சமூக ஊடகத் தளங்களில் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அந்த விவகாரம் பற்றி சொந்தமாக அமைப்பு ரீதியிலான விசாரணையை மேற்கொள்வற்காக 37 வயது திருவாட்டி கில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக 'ஹோம்' கூறியது.
தவறான நடத்தையை சந்தேகிக்க காரணம் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
அதிகாரிகளிடம் இதுபற்றி ெதரிவித்துள்ளதாகக் கூறிய 'ஹோம்', எந்த விசாரணையிலும் தனது நிர்வாக மன்றத்தினரும் ஊழியர்களும் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்குவர் என்றும் சொன்னது.
திருவாட்டி கில், சரியான ஆவணங்களைத் தராமல் செலவுக் கணக்கைக் காட்டி ஹோம் அமைப்பிலிருந்து பல்லாயிரம் வெள்ளியைக் கோரிப் பெற்றதாக இணையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவிடப்பட்டன.
அதைத் தொடர்ந்தே 'ஹோம்' திருவாட்டி கில்லை தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்தது.
இணையத்தில் வெளியிடப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் வழங்கப்படவில்லை.
திருவாட்டி கில், கடந்த 2017ல் 'ஹோம்' அமைப்பில் சேர்ந்தார். 2021 ஜூலை மாதம் அதன் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.
நன்கொடைகள், மானியங்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்காகத் தான் நடத்தும் பயிற்சி, சமூகத் திட்டங்களிலிருந்து 'ஹோம்' அதன் நிதியைப் பெற்றுவருகிறது. மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க நிர்வாகக் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்து வருவதாக 'ஹோம்' கூறியது.

