பயங்கரவாதம், சுய தீவிரவாதப் போக்குக்கு மாறுவது ஆகியவை சிங்கப்பூரின் அமைதிக்கும் வளப்பத்துக்கும் தொடர்ந்து மிரட்டலாக உள்ளதால் அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரர்கள் விழிப்புநிலையைக் குறைக்கக் கூடாது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
தொடர்பு, தகவல் அமைச்சு நடத்திய ஆய்வுகளில் கலந்துகொண்டோரில், சிங்கப்பூரை பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக நம்பியவர்களின் எண்ணிக்கை 2019ஐவிட 2021ல் 7 விழுக்காடு குறைந்தது. அந்தப் புள்ளிவிவரங்களைச் சுட்டிய அமைச்சர், “ஆபத்து இருப்பதாக மக்களின் உணர்வு குறைகிறது. ஆனால் உண்மையில் ஆபத்து கூடி வருகிறது,” என்றார்.
உள்துறைக் குழுப் பயிற்சிக் கழகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் விருதுகளை வழங்கும் விழாவில் அமைச்சர் சண்முகம் பேசினார்.
இணையத்தில் காணொளி களைப் பார்த்துவிட்டு, சுயமாகத் தீவிரவாதப் போக்குக்கு மாறியதை அடுத்து கல்வி அமைச்சின் ஆசிரியர் கடந்த ஆண்டு அக்டோபரில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தை திரு சண்முகம் சுட்டினார். அந்த ஆசிரியர், ஆயுதம் ஏந்தி ஜிஹாத் போரில் பங்கெடுக்க, காஸா பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அது அத்தகைய முதல் சம்பவமல்ல என்ற திரு சண்முகம், 2021ல் வேறொரு சிங்கப்பூரர் காஸாவுக்குச் செல்ல விரும்பியதாகவும் சிங்கப்பூரில் உள்ள யூதர்களைத் தாக்க விரும்பியதாகவும் கூறினார்.
மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சிங்கப்பூர் தொடர்ந்து எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். மோசடிகள், பகைமையுடன் மேற்கொள்ளப்பட்ட பொய் பரப்பும் இயக்கங்கள் போன்றவை அவற்றில் சிலவாகும்.
2022ன் முதற்பாதியில் மட்டும் 14,000 மோசடிகள் நிகழ்ந்ததைச் சுட்டிய அவர், பகைமையுடன் பொய்யான தகவல்களைப் பரப்பு வதை சமூக ஊடகத் தளங்கள் இன்னும் எளிதாக்கி விட்டதாகச் சொன்னார்.
சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்த திரு சண்முகம், சிங்கப்பூர் சிறிய, பல இன, பல சமய நாடு என்பதால் அது பொய் பரப்பும் இயக்கங்களுக்கு எளிதாக இலக்காகக் கூடும் என்று குறிப்பிட்டார்.