பாலர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் வருமான உச்சவரம்பு அடிப் படையில் முன்னுரிமை அளிக்கும் மாணவர் சேர்க்கையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 17ஆம் நடப்புக்கு வரும் இந்த மாற்றத்தில் குடும்ப வருமானத்தின் உச்ச வரம்பு $3,500லிருந்து $4,500க்கு உயர்த்தப்படுகிறது. இதே நாளில்தான் மாணவர் சேர்ப்புக்கான பதிவும் தொடங்குகிறது.
வருமானம் அதிகரித்து வரும் நிலையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளை களுக்கு பாலர் பள்ளிகளில் இடமிருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த மாற்றத்தை கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கையில் கல்வி அமைச்சின் 55 பாலர் பள்ளிகளில் பதிவு தொடங்கப்படும். 2022ஆம் ஆண்டில் 50 பள்ளிகள் மட்டுமே இருந்தன. 2025ஆம் ஆண்டுவாக்கில் வழக்கமாக தொடக்கப்பள்ளிகளில் இடம்பெறும் இத்தகைய பாலர் பள்ளிகள் 57க்கு அதிகரிக்கவிருக்கிறது.
பாலர் பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு மாணவர் சேர்க்கையில் முன் னுரிமை அளிக்கப்படும்.
இவர்களுடைய குடும்ப வருமானம் புதிய உச்ச வரம்பின்படி $4,500க்குள் இருக்க வேண்டும். அதாவது குடும்பத்தில் தனிநபரின் மாத வருமானம் 1,125ஆக இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு இடம் இவர்களுக்கு ஒதுக்கப்படும்.
எஞ்சிய இடங்கள் வருமான உச்சவரம்பின்றி குடிமக்களுக்கும் பாலர் பள்ளி அல்லது தொடக்கப்பள்ளியில் படித்த உடன் பிறந்தோரின் நிரந்தரவாசிகளுக்கும் இடமளிக்கப்படும்.
இதையடுத்து பொதுப் பிரிவில் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் சிங்கப்பூர் குடிமக்களாகிய ஒவ்வொரு குழந்தை மாதம் $160 செலுத்துகின்றனர்.
இதுவே நிரந்தரவாசிகளுக்கு 320 வெள்ளியாக உள்ளது.
இதர கட்டணங்கள் எதுவும் இல்லை. வெளிப்புற நடவடிக் கைகள் இலவசமாகும்.
இந்த நிலையில் பிப்ரவரி 11 அல்லது பிப்ரவரி 18 தேதிகளில் கல்வி அமைச்சின் 55 பாலர் பள்ளிகளும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவிருக்கிறது.
மாணவர் பதிவுக்கு முன்பு பள்ளிகளைப் பற்றி பெற்றோர் நன்கறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று கல்வி அமைச்சு கூறியது.
கொவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில் பொதுவரவேற்பு இணையம் வழியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக பாலர் பள்ளிகள் பொதுமக்களுக்குத் திறக்கப்படு கிறது.
அனைத்து பாலர் பள்ளிகளும் இரு மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று தாய் மொழிகளில் கல்வியை வழங்குகின்றன.
அதுமட்டுமல்லாமல் 'கேகேர்' எனும் பாலர் பள்ளி பராமரிப்பு நிலையங்களில் கட்டணச் சலுகையுடன் பள்ளிக்குப் பிந்திய பராமரிப்புச் சேவையும் வழங்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கை, 2019 ஜனவரி 2லிருந்து 2020 ஜனவரி 1 வரை பிறந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி களுக்கு உரியது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9.00 மணியிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 4.00 மணி வரை கல்வி அமைச்சின் பாலர் பள்ளியின் இணையத்தளம் வழியாக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைப் பதிந்துகொள்ள லாம்.

