ஓராண்டுக்கு முன்பைவிட சென்ற வாரம் இருமடங்கு டெங்கி பாதிப்பு; தேசிய சுற்றுப்புற வாரியத்தின் எச்சரிக்கை
சிங்கப்பூரில் சென்ற வாரம் டெங்கிச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
ஒப்புநோக்க, ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் பதிவான டெங்கிச் சம்பவங்களைவிட அது கிட்டத்தட்ட இருமடங்கு என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
நாட்டில் டெங்கிப் பரவல் மோசமடையக்கூடும் என்று வாரியம் எச்சரித்துள்ளது.
தற்போது 'செரோடைப் 3' எனும் வகையான டெங்கித் தொற்று இங்கு காணப்படுகிறது.
வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட இந்த வகை டெங்கித் தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றல் சிங்கப்பூர்வாசிகளிடையே குறைவு.
இதனால் அதிகமானோர் டெங்கியால் பாதிக்கப்படக்கூடும்சாத்தியம் உள்ளது என்பதை வாரியம் சுட்டியது.
எனவே கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க அனைவரும் உடனடியாக கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்ற வாரம் சிங்கப்பூரில் 279 பேருக்கு புதிதாக டெங்கித் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தின நிலவரப்படி, 82 இடங்கள் டெங்கி பரவும் அபாயம் அதிகம் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றில் 13 இடங்கள் பெரிய அளவிலான டெங்கிப் பரவல் அபாயம் நிலவும் இடம்.
டெங்கித் தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் தொடர்புபடுத்தப்பட்டால் அது பெரிய அளவிலான டெங்கிப் பரவல் அபாயமுள்ள இடமாகக் கருதப்படும்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 147 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் சொன்னது.
பெரிய அளவில் டெங்கிப் பரவல் அபாயமுள்ள இடங்கள் மூன்றில் டெங்கித் தொற்று வெகு வேகமாகப் பரவுவதாக அது குறிப்பிட்டது.
ஹவ்காங் அவென்யூ 1, தோ பாயோ லோரோங் 4, ஹவ்காங் அவென்யூ 6 ஆகியவை அவை.
பொதுவாக 14 நாள்களுக்குள், 150 மீட்டர் இடைவெளியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டால் அந்தப் பகுதி டெங்கிப் பரவல் அபாயமுள்ள இடமாக வகைப்படுத்தப்படும்.
சென்ற மாதம் சிங்கப்பூரில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தைவிட 24 விழுக்காடு அதிகரித்திருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அழிப்பதற்கு அனைவரும் உடனடியாகச் செயல்படவேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வீடுகளை அலங்கரிக்க உதவும் பூச்சாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். புத்தாண்டை ஒட்டி, பலரும் அலங்காரச் செடிகளைக் கொண்டு அழகுபடுத்த முனைவர் என்பதால் வீடுகள், வர்த்தக வளாகங்கள் போன்றவை மட்டுமன்றி செடிகளை விற்கும் கடைகளிலும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் சோதனையிடுவர் என்று கூறப்பட்டது.
இதன் தொடர்பில் வாரியம் விழிப்புணர்வு இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
டெங்கித் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட சிவப்பு உறைகள், விழாக்கால சுவரொட்டிகள் போன்றவற்றை அது வழங்கிவருகிறது.
இல்லங்களிலும் வர்த்தக வளாகங்களிலும் செடிகள் வைத்திருப்போர், தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்யும்படி வாரியம் அனைவருக்கும் நினைவுறுத்தியுள்ளது.

