துடிப்புடன் மூப்படைய உதவும் புத்தாக்க வழிமுறைகளையும் தீர்வுகளையும் கண்டறிவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருக்கிறார்.
உலகப் பொருளியல் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். மூப்படையும் மக்கள்தொகை தொடர்பான விவகாரங்களை சிங்கப்பூர் எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.
வீடமைப்பு தொடர்பான புத்தாக்கத்திற்குச் சான்றாக சமூக பராமரிப்பு வீடுகளை அமைச்சர் குறிப்பிட்டார். மூத்தோருக்கு ஏற்ற இந்தப் பொது வீடமைப்பு வீடுகளில் பராமரிப்புச் சேவைகள் இணைக்கப்பட்டிருக்கும். புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்டவுன் ஆகிய இடங்களில் இத்தகைய வீடுகள் முதலில் கட்டப்படும்.
மேலும், மூத்தோர் அரசாங்கக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குத் தேவைப்படும் சேவைகளுடன் இணைக்கவும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதைத் திரு லீ சுட்டினார்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நான்கில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவராக இருப்பார் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில், சமூக சேவைகளுக்கு அரசாங்க நிதியுதவி, தாதிமை இல்லங்கள், அந்திமகாலப் பராமரிப்பு, மனநலம் குன்றிய மூத்தோர் சார்பில் பராமரிப்பாளர் முடிவெடுக்க வகைசெய்யும் சட்ட நடைமுறை போன்ற அம்சங்கள் பின்பற்றப்படுவதை அமைச்சர் கூறினார்.
வரி உயர்வின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சுகாதாரப் பராமரிப்புக்கான கூடுதல் செலவு ஈடுகட்டப்படும் என்பதையும் அமைச்சர் லீ விளக்கினார்.

