இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, 3.4 விழுக்காடு கூடுதலாக வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படவுள்ளன. கடந்த இரண்டு காலாண்டுகளாக குறைந்த அந்த எண்ணிக்கை அடுத்த மூன்று மாதங்களுக்கு உயரவுள்ளது.
சராசரியாக, சான்றிதழுக்கான ஐந்து பிரிவுகளிலும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,144 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கூறியது.
ஒப்புநோக்க, 2022 நவம்பர் முதல் 2023 ஜனவரி வரை மாதம் சராசரியாக 3,040 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிஓஇ எண்ணிக்கை அதிகரிப்பதால், கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையை நிலப் போக்குவரத்து ஆணையம் மீண்டும் மாற்றியது.
சான்றிதழ்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க, கடந்த ஆண்டு ஜூலையில் அவற்றைக் கணக்கிடும் விதம் ஏற்கெனவே ஒரு முறை மாற்றப்பட்டது.
முந்தைய நான்கு காலாண்டுகளில் பதிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களின் அதே மொத்த சராசரி எண்ணிக்கையில் புதிய சான்றிதழ்களை வழங்கும் முறை பிப்ரவரியிலிருந்து நடப்புக்கு வரும். தற்போது இரண்டு காலாண்டுகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு காலாண்டும் சிஓஇ எண்ணிக்கை மேலும் கீழும் இறங்குவதைத் தவிர்க்கவே புதிய முறையில் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

