நொவீனா குளோபல் ஹெல்த்கேர் குருப் (என்ஜிஎச்ஜி) எனும் மருத்துவப் பராமரிப்புக் குழுமத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான நெல்சன் லோ நெ-லூன், 43, மேலும் ஒரு வாரத்துக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்.
போலி ஆவணங்களின் தொடர்பில் அவர்மீது சென்ற டிசம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. 2019ல் என்ஜிஎச்ஜி நிறுவனத்தின் போலி நிதி அறிக்கையைத் தயாரித்து, அவற்றைக் கொண்டு $18 மில்லியன் வங்கிக் கடன் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட லோ, தமது குடும்பத்தை நீண்டகாலாமாகப் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். லோ மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதைத் துரிதப்படுத்தும்படி விசாரணை அதிகாரிகளிடம் காவல்துறை கூறியுள்ளதாகவும் காவல்துறை வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
லோவின் ஊழியர் மைக்கல் வோங், நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டபோது, பிணைகோரினார். ஆனால் வோங் சூன் யூ என்றும் அழைக்கப்படும் அவரது வழக்கு இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவதால் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
ஈராண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறிய அந்த இருவரையும் காவல் துறை தேடி வந்தது. சீனாவின் உதவியுடன் அவர்கள் 2022, டிசம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டனர்.
நெல்சன் லோவும் அவரது உறவுக்காரர் டெரன்ஸ் லோவும் இணைந்து என்ஜிஎச்ஜி நிறுவனத்தைத் தொடங்கினர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கைச் சேர்ந்த நியூகாசல் யுனைட் குழுவை 280 மில்லியன் பவுண்ட் (S$460 மில்லியன்) கொடுத்து வாங்க முயன்றதற்காக அவர்கள் இருவரும் முதன்முதலில் அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

