உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவும்படி சீன வர்த்தக தொழில் சபைக்கு அதிபர் வலியுறுத்து
உலகின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியலாகத் திகழும் சீனாவுடன் கூடிய வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதில் சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை தொடர்ந்து முக்கிய பணியை ஆற்றிவரும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று காலத்தில் சிங்கப்பூர்-சீனாவுக்கு இடையில் தொழில்துறைத் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்து அதன் மூலம் இந்தச் சபை பெரிதும் உதவியுள்ளதாக இருக்கிறது என்றார் அதிபர் கூறினார்.
சீனா இப்போது எல்லைகளைத் திறந்துவிட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருக்கிறது. இந்தச் சூழலில் அந்தச் சபையின் செயல்பாடுகள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்று திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
பிசினஸ் சைனா அமைப்பும் சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில் சபையும் கூட்டாக ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிபர் உரையாற்றினார்.
சீனாவுடன் கூடிய சிங்கப்பூரின் தாராள வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்தும் பணிகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சீனாவில் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் அதிகமாக்குவது இதன் நோக்கம் என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.
மின்னிலக்கம், கரிமக் கழிவற்ற பொருளியல் போன்ற துறைகளில் சீனாவுடன் கூடிய பொருளியல் ஒத்துழைப்பை சிங்கப்பூர் தொடர்ந்து விரிவுபடுத்தும்.
சேவை வழங்கீட்டு கட்டமைப்பை ஆழப்படுத்தும் என்றும் அதிபர் கூறினார்.
இதனிடையே, நிகழ்ச்சியில் உரையாற்றிய சீன வர்த்தக தொழில் சபையின் தலைவர் கூ சூன் கெங், உலகப் பொருளியல் நிலவரங்கள் நிலையில்லாமல் இருக்கின்றன என்றாாலும்கூட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
மீள்திறன், ஊக்கம், புத்தாக்கத்துடன் திகழ வேண்டும் என்ற உறுதியுடன் சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்பட்டால் புதிய உச்சத்தை எட்ட முடியும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் சிங்கப்பூர் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக உடன்பாட்டுக் கட்டமைப்புகளை அவர் சுட்டினார்.
சிறிய நாடான சிங்கப்பூர் பெரும் சந்தைகளில் ஊடுருவி உள்ளே இடம்பிடிக்க வேண்டும்; ஒத்துழைப்புக்குக் கதவைத் திறந்துவைத்திருக்க வேண்டும்; ஆற்றல்மிகு திறனார்களை வரவேற்க வேண்டும்.
இப்படி இருந்தால்தான் சிங்கப்பூர் தனது பொருளியல் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியும் என்றும் நிகழ்ச்சியில் பேசிய திரு கூ குறிப்பிட்டார்.

