தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்துள்ள ஊழியர்கள் வேலை இடங்களில் எதிர்நோக்கும் சவால்களைத் திறம்பட சமாளிக்கவும் அவர்களின் மனஉளைச்சலைப் போக்கவும் அவர்கள் மீது அக்கறை காட்டி ஊக்கப்படுத்தவும் 'இந்திய நண்பர்கள் ஐக்கியம்' எனும் அமைப்பு அயராது பாடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
ஈசூன், மண்டாய், துவாஸ், காக்கி புக்கிட், உட்லண்ட்ஸ் பகுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் ஆங்கிலம், கணினி, ஆட்டோகேட் (Autocad) வகுப்புகளை இலவசமாக நடத்தி வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி வருவதாக இந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் சட்ட விதிமுறைகளை நன்கு புரிந்துகொண்டு, பொறுப்புடன் செயல்பட அவர்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொது விடுமுறை நாள்களில் நண்பர்களிடையே நட்புறவை வளர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்சிகளும், விளையாட்டுகளும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்தியர்கள் மட்டுமல்லாது, பங்ளாதேஷ், சீனாவிலிருந்து வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த அமைப்பு, கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, பல்வேறு தங்குமிடங்களில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட விடுதி வாழ் வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் கீத ஆராதனைகளையும் நடத்தி பரிசுகளையும் உணவையும் வழங்கிச் சிறப்பித்தது.
ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெத்டிஸ்ட் தேவாலயத்தில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று இல்லப் பணிப் பெண்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 23ஆம் தேதியன்று பொங்கோல் விடுதி ஊழியர்களுக்காக பொங்கோல் பிபிடி 1பி (PUNGGOL PPT 1B) விடுதியோடு இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
'குற்றச்செயல்களைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிங்கப்பூர் காவல்துறை சார்பாக ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் இரட்சணிய சேனை மையத்தோடு இணைந்து விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் வழங்கப்பட்டு வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
வரும் மே மாதம் தொழிலாளர் தினத்தன்று பள்ளித் திடலில் 300 பேருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய நண்பர்கள் ஐக்கியம் அமைப்பு தெரிவித்தது.

