சட்டவிரோத திரவப் புகைபிடித்தல் அல்லது மின்-சிகரெட் புகைபிடித்தல் கடந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகரித்ததாக சுகாதார அறிவியல் ஆணையத்தின் அண்மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மின்-சிகரெட்பயன்படுத்திய, வைத்திருந்த குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு 4,916 பேர் பிடிபட்டனர்.
2020ஆம் ஆண்டு பிடிபட்ட 1,266 பேரைக் காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகம். 2021ஆம் ஆண்டில் இந்தக் குற்றத்துக்காக 4,697 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரவ புகைபிடித்தல் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோருக்கு அதிகபட்சமாக $2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
சிகரெட் வாயிலாகவும் மின்-சிகரெட் வாயிலாகவும் புகைபிடிக்கும் போக்கு பற்றி கடந்த ஆண்டு செப்டம்பரில் மிலியு என்னும் அமைப்பு இங்கு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
புகைபிடிக்கும் பெரியோரில் 4.3 விழுக்காட்டினர் ஆவியாக்கும் கருவி போன்ற மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்தது.
2021 செப்டம்பரில் 3.9 விழுக்காடாக இருந்த இந்த விகிதம் கடந்த ஆண்டு 10 விழுக்காடு அதிகரித்தது. மேலும், 2021 முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 விழுக்காடு அதிகம். ஆவியாக்கும் கருவி அல்லது மின்-சிகரெட்டுகளில் மின்-திரவமும் சிறிய மின்கலமும் இருக்கும்.
இந்தத் திரவத்தை மின்னேற்றி மூலம் ஆவியாக்கி அதனை உள்ளிழுக்கும் போக்கு அண்மைய ஆண்டுகளாகக் காணப்படுகிறது. மாம்பழம், தர்பூசணி, கிரீன் டீ போன்ற பல்வேறு வாசனைகளில் மின்-திரவம் மின்-சிகரெட்டுகளில் அடைக்கப்படுகிறது.

