சீனப் புத்தாண்டின்போது விடாது பெய்த மழை, அடுத்த பத்து நாள்களுக்குத் தொடரவுள்ளது.
அடுத்த ஒன்பது நாள்களுக்கு சிங்கப்பூரில் இடிமழை பெய்யும் என்று வெதர்.காம் இணையத் தளம் முன்னுரைத்துள்ளது.வெப்ப நிலை குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியசிலிருந்து அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அது கூறியது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் இன்று வானிலை அதிகபட்சம் 32 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை 29ஆம் தேதி வானிலை 22 டிகிரி செல்சியசுக்குக் குறையலாம் என்றும் அது நேற்று முன்னுரைத்திருந்தது.
மழை தொடர்வதால் பெரும் பாலும் வெயிலடிக்கும் சிங்கப்பூர். பனிசூழ்ந்த குளிர்காலச் சுற்றுலாத் தலம்போல காட்சி அளிக்கிறது.
பருவமழை பெய்துவரும் தற்போதைய நிலையில் பலத்த காற்று அதிகரித்துள்ளதால் ஜனவரி முழுவதும் மழை நீடிக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தெரிவித்திருந்தது.
பெரும்பாலான நாள்களில் வானிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் சில நாள்கள் மட்டும் 33 டிகிரி செல்சியசை அது எட்டலாம் என்றும் வானியை ஆய்வு நிலையம் அப்போது கூறியது.
சீனப் புத்தாண்டு நேரத்தில் மழை பெய்வதால் சிலருக்குப் பயணத்தில் சிரமம் ஏற்பட்டது.
டனர்ன் ரோட்டில் நேற்று முன்தினம் பிற்பகலில் மரம் விழுந்ததை அடுத்து, அங்கிருந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சேவை எண் 154 கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு நகரவில்லை. அதில் பயணிகள் சிலர் சிக்கியிருந்தனர்.