சிங்கப்பூரில் கடைவீடுகளின் விற்பனை 2022ன் இரண்டாம் பாதியில் குறைந்தது. நைட் ஃபிராங்க் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை அதைத் தெரிவித்தது.
2022 ஜூலைக்கும் டிசம்பருக்கும் இடையே 67 கடைவீடுகள், மொத்தம் $625.2 மில்லியனுக்குக் கைமாறின. ஆனால் அவற்றின் ஒட்டுமொத்த விலை 2022ன் முதல் பாதியைவிட 35.6 விழுக்காடு குறைந்தது.
சென்ற ஆண்டில் மொத்தமாக 187 கடைவீடுகள் விற்கப்பட்டன. அவற்றின் ஒட்டுமொத்த பரிவர்த்தனை விலை $1.6 பில்லியன் ஆகும். ஒப்புநோக்க 2021ல் $1.9 பில்லியனுக்கு 244 கடைகள் விற்கப்பட்டன. இது ஆக அதிக விலையாகும்.
கடைவீடுகளில் கிடைக்கும் வாடகையைவிட அவற்றை வாங்குவதற்கான வங்கிக் கடன் வட்டி அதிகரித்ததால் பல முதலீட்டாளர்கள் பின்வாங்கியுள்ளதாக நைட் ஃபிராங்க் கூறியது.
இருப்பினும் சிராங்கூன், ஃபேரர் பார்க் வட்டாரக் கடை வீடுகளின் விற்பனை மும்முரமாக நடந்தது. 2022ன் பிற்பாதியில் $182.5 மில்லியன் மொத்த மதிப்பில் 26 கடைவீடுகள் விற்கப்பட்டன. மற்ற எல்லா வட்டாரங்களிலும் 10க்கும் குறைவான கடைவீடுகளே விற்கப்பட்டன.
ஜாலான் புசாரில், பழமைப் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள ஐந்து கடைவீடுகள் ஆக அதிகமாக $40 மில்லியனுக்கு விற்பனை ஆகின.
2021ல் $4.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ரோவெல் ரோடு கடைவீடு ஒன்று சென்ற அக்டோபரில் $4.9 மில்லியனுக்குக் கைமாறியது. இது 21 விழுக்காடு அதிகமாகும்.

