சிங்கப்பூரில் முதல் முறையாக ஆசிய-பசிபிக் விமானப் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
மார்ச் 22 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட அரசாங்க, தொழில்துறைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் விமானப் பாதுகாப்பு அறநிறுவனமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
மரினா பே சேண்ட்ஸில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் தொடக்க மாநாடு நடைபெறும்.
இதில் வட்டார அளவிலான பாதுகாப்புச் சவால்கள், ஏன், எப்படி பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படுகின்றன, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், மனிதர்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தரவு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது. கொள்ளை நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் பல்வேறு சவால்களை விமானத் துறை எதிர்நோக்குகிறது.
திறன் வாய்ந்த ஊழியர் பற்றாக்குறை அவற்றில் ஒன்று.
இந்தப் பிரச்சினைகளும் மாநாட்டில் ஆராயப்படும் என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன. நிதி நெருக்கடி காரணமாக சிறந்த சேவைகளை வழங்க முடியாமல் விமான நிறுவனங்கள் போராடி வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானம் செலுத்தும் முறை போன்ற புதிய தொழில்நுட்பங்களால் விமானத் துறையில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன. புதிய வாய்ப்புகளுக்கு இடமளிக்கும் அதே வேளையில் அபாயங்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று அவை கூறின. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹான் கோக் ஜுவான், இவ்வட்டார மாநாட்டை விமானப் பாதுபாப்பு அறநிறுவனத்துடன் கூட்டாக நடத்துவதில் ஆணையம் பெருமை கொள்கிறது என்றார்.
"வட்டார நாடுகள் தங்களுக்கென தனிப்பட்ட கொள்கை களைக் கொண்டிருந்தாலும் எல்லைகளுக்கு இடையிலான விமானத் துறையில் விமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒத் துழைப்பு அவசியம்," என்று அவர் மேலும் கூறினார்.
உலக நாடுகளிலிருந்து பிரமுகர்கள் மாநாட்டில் பங்கேற்பதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

