தடுப்பூசிக் காய நிதி உதவித் திட்டத்தின் வழியாக மொத்தம் 413 பேர் தங்களின் வழங்குதொகையைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2021 ஆண்டிறுதியில் 296ஆக இருந்தது. திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை மொத்தம் $1,895,000 வழங்கப்பட்டுள்ளது, அல்லது வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து இறப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கு ஆளானோருக்கு முதல் அடுக்கு வழங்குதொகையாக $225,000 அளிப்படுகிறது. இதுவரை, மூன்று விண்ணப்பதாரர்கள் இதற்குத் தகுதிபெற்றுள்ளனர். திட்டத்திற்குத் தகுதிபெற, தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லது நீண்டகால தங்கும் விசா பெற்ற அட்டைதாரராக இருக்க வேண்டும்.
அத்துடன் மருத்துவர் மதிப்பீட்டின் படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்குக் கடுமையான பக்க விளைவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை, தொடர்ச்சியாகத் தன் ஆற்றலை இழந்த நிலை அல்லது இயலாமை, அல்லது உயிரிழப்பு ஆகிய சூழல்கள் நேர்ந்திருந்தால் திட்டத்தின் கீழ் வழங்குதொகை பெறுவதற்கு அவர் விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை தாதியர் ஒருவர் தமது இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதை அடுத்து, அவருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் 151 நாள்களுக்கு மருத்துவமனையில் இருந்தார். சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலையும் எந்நேரமும் உடலுக்குள் பிராணவாயு செலுத்தப்பட வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது.
இருப்பினும், அவர் இத்திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

